2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மகஜர் கையளிப்பு

Kogilavani   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பெட்

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள், தம்மை மீண்டும் தமது சொந்த இடத்தில் குடியேற்றுமாறு கோரி, இன்று வெள்ளிக்கிழமை(18) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் ஏற்பாட்டில் முள்ளிக்குளம் கிராம அபிவிருத்திச்சங்கம், முள்ளிக்குளம் மீனவ சங்கம், முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.ஏ.தவராஜ் ஆகியோர் இணைந்து இம்மகஜரை கையளித்தனர். இதன்போது கருத்துதெரிவித்த முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.ஏ.தவராஜ்,

'முள்ளிக்குளம் மக்களின் துயரங்களை நாளாந்தம் கண்டு வருகிறோம். புதிய அரசாங்கம் முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு விடிவை கொடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். முள்ளிக்குளத்தில் மக்களின் காணிகளில் கடற்படையினர் உள்ள நிலையில், குறித்த காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.

மக்களை எவ்வாறாவது அவர்களின் சொந்த மண்ணில் குடியேற்ற வேண்டும் என்ற சிந்தனையோடு செயற்பட்டு வந்தார். இந்த மக்களின் எண்ணம், சிந்தனை, ஆர்வம், ஆசை, எதிர்கால கனவு ஆகிய அனைத்;தும் தமது சொந்த இடத்தில் குடியேறி வாழ வேண்டும் என்பதாகவே காணப்படுகின்றது.
இதுதொடர்பில் நாங்கள் பல்வேறு தரப்பினருக்கு பல வகையிலும் அழுத்தங்களை கொடுத்த போதிலும் இதுவரை முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. தற்போது அரசாங்கம் சிறு பகுதியை விடுவதாக ஒத்துக்கொண்டாலும் அந்த பகுதிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

அப்பகுதியில் சுமார் 150 ஏக்கர் காட்டுப்பகுதியை விடுவிப்பதாக அறிவித்துள்ளனர். அந்த காட்டுப்பகுதியினுள் கடற்படையினரின் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றமை கவலைக்கூறிய விடயம். ஆயருடைய நிலப்பகுதியான 53 ஏக்கரையும் அதற்கு பின் உள்ள பகுதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதையே இம்மக்கள் அன்று முதல் இன்றுவரை கேட்டு வருகின்றனர்.

எனவே இந்த மக்களின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு புதிய அரசாங்கம் மக்களின் ஏக்கங்கள், மக்களின் விருப்பங்களை ஏற்றுக்கொண்டு அவற்றை நிறைவேற்றுவார்கள் என்று எமது உள்ள ஆதங்கங்களை வெளிப்படுத்துகின்றோம்.

மிக விரைவிலே முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். எமக்கான உரிமைகள் கிடைக்கும்வரை நாங்கள் தொடர்ந்தும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X