2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மணல் கடத்தலுக்கு பொலிஸார் உடந்தை

Menaka Mookandi   / 2016 மார்ச் 01 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் கடத்தலுக்கு, பொலிஸார் உடந்தையாகவும் சிலவேளைகளில் பாராமுகமாகவும் செயற்படுவதாக கண்டாவளை பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

கண்டாவளை பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டம், தர்மபுரம் நெசவுச்சாலை மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத்தலைமையில், செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த சிறிதரன் எம்.பி, 'கிளிநொச்சியின் பல்வேறு இடங்களிலும் சட்டவிரோதமான மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு கடிதம் எழுதியிருந்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் பொலிஸார் எடுக்கவில்லை.
மணல் கொள்ளை நடக்கின்றது என அறிவித்தாலும் பாராமுகமாக இருக்கின்றனர். திருவையாற்றுப் பகுதியில் பெருமளவான மணல் எடுக்கப்படுகின்றது. எவ்வாறு என்று விசாரித்தால் பொலிஸாரின் துணையுடன் நடக்கின்றது என தகவல் கிடைத்தது' என்றார்.

இதற்கு பதிலளித்த பதில் பொறுப்பதிகாரி தரத்திலான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், 'காட்டுப்பகுதியில் மணல் கடத்தல் இடம்பெறுவதால் அங்கு சென்று கட்டுப்படுத்துவது முடியாமல் உள்ளது. மேலும் இரவு வேளைகளில் நடைபெறுவதால் உரிய வகையில் நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளது' என்றார்.

இதன்போது குறுக்கிட்ட அங்கஜன் இராமநாதன் எம்.பி, 'இந்த பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சட்டவிரோத நடவடிக்கையைக் கட்டுப்படுத்துதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X