2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

‘விபத்துகளை இல்லாதொழிப்பதற்கு பாடுபட வேண்டும்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 19 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நடைபெறுகின்ற ஒன்று, இரண்டு விபத்துகளைக் கூட இல்லாதொழிப்பதற்கு சாரதிகள் பாடுபடவேண்டுமென, வட மாகான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம், றோயல் கார்டன், ஹொரவபொத்தான வீதி, வவுனியா நேற்று (18) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தில் அண்ணளவாக 110 உரிமையாளர்கள் வரையில் இணைந்து செயற்படுவதாக அறிகின்றேன். இச் சங்கத்தில் பணிபுரிகின்ற பணியாளர்களுக்கான சம்பளங்கள் முறையாக வழங்கப்படுவது மட்டுமன்றி அவர்களுக்கான EPF, ETF கொடுப்பனவுகளும் மற்றும் சங்கத்துக்கான மாதாந்தப் பொதுச் செலவுகளும் ஈடுசெய்யப்பட்டு வருவதாக அறியத்தரப்பட்டுள்ளன.

“இவ்வாறான ஒற்றுமையும் கூட்டுப்பொறுப்பும் பரோபகார சிந்தனைகளும் ஒருமித்த தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஆற்றலும் எமது மக்களிடையே அரசியல் ரீதியாக இருந்திருக்குமேயாயின் எமது பிரச்சினைகள் என்றோ தீர்க்கப்பட்டிருப்பன.

“தனியார் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் அரச போக்குவரத்துச் சேவைகள் ஆகியவற்றின் சேவைகளுக்கான நேர அட்டவணை 60:40 என்ற வகையில் தயாரிக்கப்பட்ட போதும் அது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாகாணங்களில் இவ்வாறான நேர அட்டவணைகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற போதும் எமது பகுதிகளில் இவை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாமை வருத்தத்துக்குரியது.

“வடமாகாண போக்குவரத்து ஆணைக்குழு, இவ்விடயங்களை சீர்தூக்கி ஆராய்ந்து பார்த்து இலங்கை போக்குவரத்துச் சபையுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி ஒரு நல்ல முடிவுக்கு விரைவில் வருவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

“தற்போதைய பஸ்களில், புறப்படும் இடம் சேரும் இடம் இரண்டு இடங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால் எங்கிருந்து புறப்பட்டு எங்கு செல்கின்றது என்பதை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள் என்னவென்று தெரியவில்லை.

“உங்கள் சாரதிய ஒழுங்கும் மக்கள் பாதுகாப்பும் 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தற்போது நடைபெறுகின்ற ஒன்று, இரண்டு விபத்துகளைக் கூட இல்லாதொழிப்பதற்கு சாரதிகள் பாடுபடவேண்டும். சுமார் 20-30 வருடங்களுக்கு முன்னர் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் சிறந்த சாரதிகளாக இனங் காட்டப்பட்டிருந்தனர். ஆனால் இன்று அந்த நிலையில்லை. போட்டித் தன்மை காரணமாக வீதி ஒழுங்கு சைகைகள், சமிக்ஞைகள் ஆகியவற்றைப் புறக்கணித்து நினைத்தவாறே நிறுத்துவது, எடுத்த மாத்திரத்தில் இயக்குவது, பின்பார்வை கண்ணாடிகளை முறையாக உற்று நோக்காது இயக்குவது போன்ற பல குறைபாடுகள் எமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறான குறைகளை நீக்க நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும்” என, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .