2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மு.காவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Gavitha   / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூ.எல். மப்றூக்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிருந்து விலக்கியமைக்கு எதிராக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் , மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு, மூன்று நீதியரசர்கள் முன்னிலையில், நேற்று திங்கட்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அவ்வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், மு.காங்கிரஸுக்கும் அதன் தலைமைத்துவத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரை கட்சியிலிருந்தும், மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதென மு.கா.வின் உயர்பீடம் கடந்த ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தீர்மானமொன்றினை எடுத்திருந்தது.

மாகாணசபை உறுப்பினரொருவர் கட்சியிலிருந்து நீக்கப்படும் போது, அந்தக் கட்சி சார்பாக அவர் வகித்து வரும், மாகாணசபை உறுப்பினர் பதவியினையும் குறித்த கட்சியின் கோரிக்கைக்கிணங்க வறிதாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை எதிர்த்தே, மாகாணசபை உறுப்பினர் ஜெமீல்  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 18 ஆம் திகதி, வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான மாலினி குணரத்ன, தீபாலி விஜேசுந்தர மற்றும் எம்.எம்.ஏ. கபூர் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு, எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக, நாடாளுமன்ற உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம். சுமந்திரன் இவ்வழக்கில் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .