2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பேர்லின் கிறிஸ்மஸ் சந்தை ட்ரக் தாக்குதல்: தாக்குதலாளிக்கு உடந்தையானவர்களைத் தேடுகிறது ஜேர்மனி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியின் தலைநகரான பேர்லினில் கடந்த திங்கட்கிழமை (19) இடம்பெற்ற ட்ரக் தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலாளி அனிஸ் அம்ரிக்கு உடந்தையானவர்களை ஜேர்மனி தேடி வருகிறது.

அம்ரியை ஜேர்மனி கைதுசெய்துள்ளதாக துனீஷிய அறிவித்துள்ள நிலையிலேயே, அம்ரிக்கு உடந்தையானவர்களை ஜேர்மனி தேடுவதாகக் கூறப்படுகிறது.

18 தொடக்கம் 27 வயதுகளையுடைய, அம்ரியின் மருமகனும், சந்தேகத்துக்கிடமான வேறு இரண்டு ஆயுததாரிகளும், கடந்த வெள்ளிக்கிழமை (23) தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக துனீஷிய உள்நாட்டு அமைச்சு தெரிவித்திருந்தது. குறித்த நபர்கள், துனீஷியாவில் பிறந்த அம்ரியுடன் தொடர்புடைய பயங்கரவாத வலையமைப்பின் அங்கத்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

தடுத்து வைக்கப்பட்ட மூவருக்கிடையேயும், கிறிஸ்மஸ் சந்தையில் 12 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுடன் நேரடித் தொடர்பை கொண்டிருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

ட்ரக்கை கடத்திக் கொண்டு போய் மோதிய 24 வயதான அம்ரி, நான்கு நாட்களாக தப்பி ஓடியபின்னர், இத்தாலியின் மிலன் நகரத்தில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதையடுத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பெர்லின் தாக்குதலுக்கு உரிமை கோரிய ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழு, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதிக்கு அம்ரி ஆதரவு வழங்கும் காணொளியை வெளியிட்டிருந்தது.

இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள அம்ரியின் மருமகன், ஜேர்மனியைத் தளமாகக் கொண்ட இஸ்லாமியக் குழுவான அபு அல்-வாலா பிரிகேட்டின் தலைவர் தனது மாமா என்று தெரிவித்துள்ளார்.

தனது மருகமகனுக்கு பணத்தை அனுப்பிய அம்ரி, தனது மருமகன் ஜேர்மனிக்கு வந்து தன்னுடன இணைந்து கொள்ளலாம் எனத் தெரிவித்ததுடன், ஐ.எஸ்.ஐ‌.எஸ் ஆயுதக் குழுவுக்கு ஆதரவளிக்குமாறும் கோரியுள்ளார்.

இந்நிலையில், வெளிநாடுகளில் தீவிரவாதக் குழுக்களில் போரிட்டுவிட்டு நாட்டுக்குத் திரும்பும் ஆயுததாரிகளை கண்டுபிடிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென துனீஷியப் பாதுகாப்புப் படைகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .