2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கோல் மழையில் நனைந்த கிண்ணம் சென் மேரிஸ் வசம்

George   / 2015 பெப்ரவரி 09 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன் 


யாழ்ப்பாணம் சென்.மைக்கல் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட, அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் நாவாந்துறை சென். மேரிஸ் அணி 5:3 என்ற கோல் கணக்கில் ஊரெழு றோயல் அணியை வென்று சம்பியனாகியது. 

யாழ். மாவட்டத்தை சேர்ந்த 30 அணிகள் பங்குபற்றிய இந்த சுற்றுப்போட்டி உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்தது. 

அரையிறுதியாட்டங்களில் சென்.மேரிஸ்  அணி 11:1 என்ற கோல் கணக்கில் நவிண்டில் கலைமதி அணியையும் றோயல் அணி, பெனால்ரி மூலம் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக்கழகத்தையும் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இறுதிப்போட்டி, ஞாயிற்றுக்கிழமை(08)இடம்பெற்றது. 

முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டம் ஆடி மாறி மாறி கோல்கள் அடித்தன. ஊரெழு றோயல் அணியின் தர்மகுலநாதன் கஜகோபன் ஹெட்ரிக் கோல் அடித்தார். பதிலுக்கு சென்.மேரிஸ் அணியின் அருள்ராசா ஜூட், ஜெனிஸ்ரன், பிரேமானந்தன் ஜெனட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்; அடித்தனர். முதல் பாதியாட்டம் தலா 3 கோல்கள் அடிக்க போட்டி சமநிலையில் முடிவடைந்தது. 

இரண்டாவது பாதியாட்டம் சென். மேரிஸ் அணியின் ஆட்டமாகவே இருந்தது. றோயல் அணியின் தாக்குதல் ஆட்டத்தை சமாளித்த சென். மேரிஷ் அணிக்கு முன்கள வீரர் மரியதாஸ் நிதர்சன் அடுத்தடுத்து 2 கோல்களைப் பெற்றுக்கொடுத்து அணியை முன்னிலைப்படுத்தினார். றோயல் அணியால் பதில் கோல் எதுவும் பெறமுடியவில்லை. சென்.மேரிஷ் அணி 5:3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. 

இறுதிப்போட்டியின் நாயகனாக றோயல் அணியின் தர்மகுலநாதன் கஜகோபன், தொடர்நாயகனாக சென். மேரிஸ் அணியின் அருள்ராசா ஜூட், சிறந்த கோல் காப்பாளராக சென். மேரிஸ் அணியின் எஸ்.சுதர்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். சிறந்த அனுபவ வீரராக எஸ்.தர்மகுலநாதன் தெரிவு செய்யப்பட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .