-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய 50 பந்து பரிமாற்றம் கொண்ட லீக் முறையிலான சுற்று போட்டியில் யங் ஒலிம்பிக்ஸ் கழகம் இன்று சனிக்கிழமை, ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினரை 232 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய யங் ஒலிம்பிக்ஸ் கழகம் நிர்ணயிக்கப்பட்ட 50 பந்து பரிமாற்றங்களில் 7 விக்கட்டுக்களை இழந்த 351 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. டிலான் ஆட்டம் இழக்காமல் 58 பந்துகளுக்கு முகம் கொடுத்து 80 ஓட்டங்களையும், பி.திலக்சன் 63 (51) ஓட்டங்கள், நிரோஷன் 58 (50) ஓட்டங்கள், த.நரேஷ்குமார் 44 (66), முஹமட் றிஸ்னி 31 (18) ஓட்டங்கள், பிரகதீஸ் 20 (16) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியைச் சேர்ந்த திவாகரன் 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், பர்கத் பாசா, தர்சிகன், விதசன், பிரணவன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்.
352 என்ற ஓட்ட இலக்குடன் களம் இறங்கிய ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் 31.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.
பிருந்தநாத் 27, தர்சிகள் 18, சபான் 14, பர்கத் பாசா 13, யதுசன் 12, மிதுசன் 8, கவிதரன் ஆட்டம் இழக்காமல் 4, ரொசான் 4 ஓட்டங்களையும் பெற்றனர். சிறப்பாக துடுப்பெடுத்து ஆடுவார்கள் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட எ.விதுசன், செ.திவாகரன் ஆகியோர் எவ்வித ஓட்டங்களையும் பெறாமல் ஆட்டம் இழந்தனர். இவர்களின் பொறுப்புணர்வற்ற துடுப்பாட்டம், ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
பந்து வீச்சில் யங் ஒலிம்பிக்ஸ் சார்பில் ஜெனி, நரேஷ்குமார் நிரோசன், திலக்சன் அகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், ஜெயந்திரன், பிரகதீஸ் அகியோர் தலா ஒரு விக்கெட்டையும் பெற்றனர்.