2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வெள்ளைக்கொடி விசாரணை; சரத் பொன்சேகா நீதிமன்றம் வரவில்லை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாருக் தாஜுதீன்)

வெள்ளைக்கொடியை ஏந்திய நிலையில் படைகளின் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை சுட்டுக் கொல்லுமாறு பாதுகாப்பு செயலாளர் படைகளுக்கு ஆணையிட்டதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு மேல்நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

எனினும் சுகவீனம் காரணமாக விசாரணைக்கு வர முடியாத நிலையில் பொன்சேகா உள்ளார் என்று இராணுவ சட்ட அதிகாரி நீதிமன்றுக்கு அறிவித்தார். அதனால் அவ்விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.  கடற்படை வைத்தியர் ஒருவர், பொன்சேகாவுக்கு சிகிச்சையளிக்க நியமிக்கப்பட்டுள்ளார் என அந்த சட்ட அதிகாரி தெரிவித்தார். அத்துடன் வைத்திய பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

வழக்காளி தரப்பில் ஆஜரான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வசந்த நவரட்ண பண்டார, சரத் பொன்சேகாவின் வருத்தம் என்ன என அறிய விரும்புவதாக கூறினார். மேலும் பொன்சேகா இப்போது எங்கு வைக்கைப்பட்டுள்ளார் என வினா எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக சட்ட அதிகாரி சரத் பொன்சேகாவுக்கான மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றார். அவர், கடற்படைத் தலைமையகத்தில் மறியல் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

சரத் பொன்சேகா சார்பில் ஆஜரான நளின் வட்டுவஹெற்றி, வைத்திய குழுவொன்றை வரவழைத்து அவரது நோய் என்னவென கண்டுபிடிக்க வேண்டும் என்றார். பிரச்சினைக்குரிய கூற்றை பொன்சேகா கூறியதான நேர்முகத்தை பதிவு செய்த ஊடகவியலாளர் பிரெட்ரிகா ஜான்ஸின் குறிப்பின் போட்டோ பிரதிகள் தனக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வசந்த நவரட்ண பண்டார, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, சேனுக செனிவரட்ண ஆகியோரை தற்போது சாட்சியாக அழைக்க வேண்டாமெனவும், அவர்கள் தேவையான போது குறுகியகால அறிவித்தலில் நீதிமன்றில் தோன்றுவர் என கூறினார்.

நீதிமன்றம், பிரதிவாதியின் வழக்குறைஞர் கேட்டபடி பிரெட்ரிகா ஜான்ஸனின் குறிப்பு புத்தகத்தின் போட்டோ பிரதியை வழங்கும்படி நீதிமன்றின் பதிவாளருக்கு பணித்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .