2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சமயக் கடமையாகும்: ஹுனைஸ் பாரூக் எம்.பி.

Super User   / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஒரு சமயக் கடமையாக நோக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுகந்திரக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.

வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 20 வருட ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

1990ஆம் ஆண்டு வட மாகாண முஸ்லிம்கள் ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை இலங்கைத் நாட்டிற்கு கறை படிந்த வரலாற்றை தோற்றுவித்த ஆண்டாகும்.

இக்கோர நிகழ்வுக்கு விடுதலைப் புலிகள் காரணம் என்றாலும், அவர்களுக்குரிய தகுந்த பாதுகாப்பை வழங்கத் தவறிய அப்போதை ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் ஒருவகையில் பொறுப்புதாரிகள் என்ற கசப்பான உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

பல்லின சமூகங்கள் வாழும் இந்நாட்டிலே பல ஆயிரம் வருடங்கள் சம அந்தஸ்துடனும் உரிமைகளுடனும் வாழ்ந்த வடபுல முஸ்லிம்கள் ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை, உலக வரலாற்றில் எங்கும் இடம் பெற்றிருக்காத ஒரு பெரும் அநியாயமாகும்.  
இது பலஸ்தீன பிரச்சினையை விடவும் பாரதூரமான நிகழ்வாகும்.

இதனால் முஸ்லிம்களின் பல்வேறுபட்ட உரிமைகள் மீறப்பட்டது மாத்திரமின்றி அவர்களின் வாழ்க்கைத் தரமும் படுமோசமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 20 ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில் அவர்களது மீள் குடியேற்றக் கனவு இன்னும் நனவாகாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கும் விடயமாகும்.

1990ஆம் ஆண்டிலிருந்து பலமுறை முஸ்லிம்கள் வடக்கிலுள்ள தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் நடவடிக்கைகளை மேற்கொண்ட பொழுதிலும் பல்வேறுபட்ட காரணங்களால் அது முற்றாக கை கூடவில்லை.

குறிப்பாக விடுதலைப் புலிகள் பற்றிய பயமே முஸ்லிம்கள் முழுமையாகக் குடியேறாமைக்கான பிரதான காரணமாகும்.

கடந்த ஆண்டு விடுதலைப் புலிகள் பூரணமாக ஆயுதமுனையில் தோற்கடிக்கப்பட்டதன் பின், முஸ்லிம் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுவரை சுமார் 10,000 குடும்பங்கள் சுயவிருப்பின் அடிப்படையில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதற்கு தங்களது பெயர்களைப் பதிவு செய்து அவர்களில் பெரும் பகுதியினர் குடும்பங்கள் சகிதம் அங்கு வசித்து வருகின்றனர்.

வட பகுதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை கேள்விக் குறிக்குள்ளாக்கும் பல விடயங்கள் காணப்படுகின்றன.

அவர்களின் அடிப்படைத் தேவைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கின்றமையே மீள்குடியேற்ற நகர்வுகள் மிகவும் பின் தங்கியுள்ளது.

கடந்த ஒரு ஆண்டு காலமாக மீள்குடியேற்றம் தொடர்ந்தும் இடம்பெற்ற பொழுதிலும் பெரும்பாலான குடும்பங்களின் வதிவிட, குடிநீர், சுகாதார, போக்குவரத்து, கல்வி வசதிகள் இன்னும் பூரணமாக வழங்கப்படவில்லை.

இவ்வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் மக்கள் குடியேறுவதோ அல்லது குடும்பங்களுடன் தொடர்ந்து அங்கு வசித்து வருவதோ அறவே முடியாத காரியமாகும்.

கடந்த 20 வருட காலப் பகுதிகளில் இவர்களின் குடியேற்றப் பகுதிகளிலிருந்து சகல வளங்களும் பல்வேறுபட்ட தரப்பினரால் அகற்றப்பட்டு அப்பிரதேசங்கள் எவ்வித வசதிகளுமற்ற நிலையில் காணப்படுகின்றமை மற்றுமொரு காரணமாகும்.

சர்வதேச சமூகமும், நிதி வழங்குனர்களும் புதிதாக இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றத்துக்கே முக்கியத்துவம் கொடுப்பதுடன் 1990களில் இடம்பெயர்ந்தவர்களின் விடயத்தில் அக்கறையின்றி,  நிதியுதவி வழங்க முன் வருகின்றமை முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை பாதிப்படையச் செய்துள்ளது.

இஸ்லாமிய நாடுகளும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அக்கறையின்றி இருப்பதும் இதனைப் பற்றிய எதுவித விழிப்புணர்வையும் பெறாமல் இருப்பதுவும் கவலை தரும் விடயமாகவே காணப்படுகின்றது.

அண்மையில் இந்திய அரசு 50,000 வீடுகளை அமைத்து தருவதற்கு நிதியுதவி வழங்க முன் வந்திருக்கின்றமை போன்று ஏன் இஸ்லாமிய நாடுகள் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு நிதியுதவி வழங்க முன் வரக்கூடாது என்ற ஆதங்கத்தை சகல தரப்பினரிடத்திலும் ஏற்படுத்துகின்றது.

 சகல தரப்பினரும் இதில் ஆர்வம் காட்டவேண்டும் முஸ்லிம் சமூகத்திலுள்ள செல்வந்தர்கள், இஸ்லாமிய நிறுவனங்கள், இஸ்லாமிய நாடுகள், நலன் விரும்பிகள், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரேயணியில் நின்று உழைக்கும் பொழுது தான் ஒரு அர்த்தமுள்ள மீள்குடியேற்றத்தை சாத்தியமாக்கலாம்.

இல்லா விட்டால் இந்த நாட்டின் பல பிரதேசங்களில் சிதறி வாழ்ந்து வரும் சுமார் 30,000 அகதிக் குடும்பங்களின் நிலை மிகவும் கவலைக்கிடமானதாகவே தொடர்ந்தும் காணப்படும்.


You May Also Like

  Comments - 0

  • A.H. M. Athil Saturday, 30 October 2010 04:49 PM

    சமய சிந்தனையுடன் கலந்த சமூஹத்தின் thunbangkalai thanathu thunphamaha ninaikkum ungalaip pontra arasiyalvathigalai naalaiya samoohaththin thalaivarkalaha varuvatharkku prarththikkintren.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .