இந்திய வம்சாவளி தமிழ் பூர்வீகத்தை கொண்ட தென்னாபிரிக்க பிரஜையான நவநீதம் பிள்ளை, ஓர் இரும்பு பெண். அவர் ஓர் அரசியல்வாதி அல்ல. ஐநா அதிகாரி, சட்ட அறிஞர். உலகம் முழுக்க வாழும் தமிழ் பெண்களுக்கெல்லாம் அவர் பெரும் உதாரணம். இந்திய வம்சாவளி தமிழர்களான நவநீதம் பிள்ளையின் முன்னோர் தென்னிந்தியாவில் இருந்து நல்லவேளையாக தென்னாபிரிக்காவுக்கு போனார்கள். இங்கு கண்டி சீமைக்கு கொண்டுவரப்பட்ட மலையக மக்களை போல் அவர்களும், தப்பி தவறி அன்று இலங்கை வந்திருந்தால் இன்று என்ன நடந்து இருக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்? அப்படி அவர்கள் இலங்கை வந்திருந்தால் அவர்களுக்கு பிறந்த நவநீதம் பிள்ளையும், இன்று இங்கு மலைநாட்டில் வாழும் பெரும்பாலான இந்திய வம்சாவளி தமிழ் பெண்களைப்போல் கொழுந்து கூடையை சுமந்து கேள்வி குறியைபோல் முதுகு வளைந்து, உழைத்து உருக்குலைந்து போயிருப்பார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் பெண்கள் அணியான ஜனநாயக மகளிர் இணையத்தின் அமைவு தொடர்பான ஆலோசனை கூட்டம் இணையத்தின் செயலாளர் நந்தினி செல்வரத்தினம் தலைமையில் இன்று பாமன்கடை பணிமனையில் நடைபெற்றது. அதன்போது உரையாற்றிய கட்சியின் தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கட்சியின் பெண்கள் அமைப்பான ஜனநாயக மகளிர் இணையம் கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளது. எமது பெண்கள் அணியின் செயல்பாடு ஏற்கனவே ஆரம்பித்து விட்டாலும், சம்பிரதாயபூர்வமான ஆரம்பத்தை நடத்த இப்போது நீங்கள் கட்சியுடன் இணைந்து முடிவு செய்துள்ளீர்கள்.
இதற்கு முன்னாள் ஓகஸ்ட் மாதம் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்ட நமது கட்சியின் இளைஞர் அமைப்பான ஜனநாயக இளைஞர் இணையம் இன்று வீறு நடை போட்டு வருகிறது. இதுபோல் இனி உதயமாக போகின்ற போகும் ஜனநாயக மகளிர் இணையமும் எழுச்சி நடை போடும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. இது எமது கட்சிக்குள் இன்று புதிய இரத்தம் பாய்ச்சப்பட்டு வரும் வளர்ச்சி போக்கை அடையாளப்படுத்துகின்றது.
மகளிர் இணையத்தில் இப்போதே தகுதி வாய்ந்த சகோதரிகள் பலர் இணைந்து கொண்டுள்ளார்கள். இன்னும் தகுதிவாய்ந்த பலர் எமது ஜனநாயக மகளிர் இணையத்தில் இணைந்து கொள்ள முன்வர வேண்டும் என நான் வாழ்த்தி வரவேற்கின்றேன். ஆண்களால் வழிநடத்தப்படும் சமூக பாத்திரம் மாத்திரமே தங்களுக்கு வகுக்கப்பட்டது என்ற காலம் கடந்த சிந்தனையை பெண்கள் களைய வேண்டும். சமூகத்தை வழிநடத்தும் பாத்திரத்தை ஆண்களுடன் சமத்துவமாக நின்று பெண்களும் வகிக்கவேண்டும்.
தமிழ் பெண்களுக்கு பெரும் உதாரணம் இந்தியவம்சாவளி தமிழ் பெண் நவநீதம் பிள்ளை. உலகம் வியக்கும் அவரை முன்னுதாரணமாக கொள்ளுங்கள். அவரது முன்னோர் தென்னிந்தியாவிலிருந்து இலங்கை வராமல் தென்னபிரிக்கா போனார்கள். ஆகவே அவர் வாழ்ந்து வளர்ந்த சூழல் அவரை உயர்த்தி விட்டது. அவர் வாழ்ந்து வந்த அத்தகைய சூழலை நம் நாட்டில் உருவாக்க நாம் உழைக்க வேண்டும்.