இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கான குறும்பட்டியலில் 5 பயிற்றுவிப்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய பயிற்றுவிப்பாளரான கிரஹம் ஃபோர்ட் எதிர்வரும் ஜனவரியுடன் தனது பதவியிலிருந்து விலகவுள்ள நிலையில், புதிய விண்ணப்பங்களை இலங்கை கிரிக்கெட் சபை கோரியிருந்தது. இதன்போது 11 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் சபை செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, 2 வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களும், 3 உள்ளூர் பயிற்றுவிப்பாளர்களும் இறுதிக்கட்ட நேர்முகத் தேர்வுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இது தவிர, இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த 23 வயதிற்குட்பட்ட 5 வீரர்களை இலங்கைத் தேசிய ஒப்பந்தத்தில் உள்ளடக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை முடிவெடுத்துள்ளது.
ஏனைய முடிவுகள்:
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது.
இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் முகாமையாளர் ஏ.ஆர்.எம்.ஆரூஸ் மீதான ஒழுக்கவியல் குற்றச்சாட்டுக்களையடுத்து அவருக்கு 5 வருடகாலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.