2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

றோமாவிடம் தோற்று வெளியேறியது பார்சிலோனா

Editorial   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டியுடன் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா, இத்தாலிய சீரி ஏ கழகமான றோமாவால் வெளியேற்றப்பட்டுள்ளது.

தமது மைதானத்தில் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியின் முதலாவது சுற்றில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த பார்சிலோனா, றோமாவின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற காலிறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்றுப் போட்டியின் ஆறாவது நிமிடத்திலேயே றோமாவின் எடின் டெக்கோ கோல் கம்பத்தருகிலிருந்து பெற்ற கோல் காரணமாக ஒரு கோல் பின்தங்கியிருந்தது.

பின்னர், எடின் டெக்கோ, பார்சிலோனாவின் பின்கள வீரர் ஜெராட் பிகேயால் வீழ்த்தப்பட போட்டியின் 58ஆவது நிமிடத்தில் வழங்கப்பட்ட பெனால்டியை றோமாவின் டானியல் டி றோசி கோலாக்க அவ்வணி தமது முன்னிலையை இரட்டிப்பாக்கிக் கொண்டது.

இதைத் தொடர்ந்து தீர்க்கமானதாக, போட்டியின் 82ஆவது நிமிடத்தில் றோமாவின் சென்கிஸ் அன்டர் செலுத்திய மூலையுதையை அவரின் சக வீரர் கொஸ்டாஸ் மனோலஸ் தலையால் முட்டிக் கோலாக்கியதோடு 3-0 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்ற றோமா, 4-4 என்ற கோல் கணக்கில் மொத்த கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தி, பார்சிலோனாவின் மைதானத்தில் தாம் பெற்ற கோல் காரணமாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுக் கொண்டது.

இதேவேளை, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் மைதானத்தில் நடைபெற்ற தமது காலிறுதிப் போட்டியின் முதலாவது சுற்றில் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி, தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற காலிறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்றின் இரண்டாவது நிமிடத்திலேயே, மன்செஸ்டர் சிற்றியின் ரஹீம் ஸ்டேர்லிங் கொடுத்த பந்தை சக வீரர் கப்ரிய ஜெஸூஸ் கோலாக்க மன்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து, போட்டியின் 56ஆவது நிமிடத்தில் லிவர்பூலின் மொஹமட் சாலா பெற்ற கோலோடு கோலெண்ணிக்கையைச் சமப்படுத்திய அவ்வணி, 77ஆவது நிமிடத்தில் றொபேர்ட்டோ பெர்மினோ பெற்ற கோலோடு 2-1 என்ற கோல் கணக்கில் வென்று 5-1 என்ற மொத்த கோல் கணக்கில் அரையிறுதிப் போட்டிக்கு லிவர்பூல் தகுதிபெற்றுக் கொண்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .