2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மீள்குடியேற்றப்படாமலுள்ள வெலிக்காகண்டிய மக்கள்

Super User   / 2010 ஒக்டோபர் 31 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்தவர்களில் வெலிக்காகண்டிய கிராம மக்கள்  இன்னமும் தங்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படாமல் கோப்பாவெளியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
 
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லைக் கிராமமான இக்கிராமத்தைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 1990ஆம் ஆண்டு தமது கிராமத்தில் நிலவிய பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக அங்கிருந்து வெளியேறி வேறு இடங்களில் வசித்து வந்தனர்.
 
2007ஆம் ஆண்டு ஏனைய கிராம மக்களைப் போல் மீள் குடியேற்றத்திற்காக இக் கிராம மக்களும் அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் சொந்த கிராமத்தில் மீள் குடியேற்றப்படாத நிலையே இன்னமும் காணப்படுகின்றது.
 
தங்கள் கிராமத்திற்குச் சென்று வேளாண்மை செய்கை பண்ணக் கூடிய வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டாலும் இமீள் குடியேற்றம் பற்றி எவரும் அக்கறை கொள்வதாக இல்லை என கோப்பாவெளியில்  தங்க வைக்கப்பட்டுள்ள இக்குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கூறுகின்றார்கள்.
 
மீள்குடியேற்றத்திற்குரிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தராமை மற்றும் காட்டு யானைகளின் தொல்லை போன்றனவே தமது மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
 
மீள்குடியேற்றம் எனக் கூறி அழைத்து வரப்பட்டு 3 வருடங்களான போதிலும் இன்னமும் தங்களது சொந்தக் கிராமத்தில் மீள்குடியேற்றம் இன்றி பல்வேறு கஷ்டங்களையும், சிரமங்களையும் அனுபவித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
 
இது தொடர்பாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கேட்ட போது,
 
'இக் குடும்பங்கள் சுய விருப்பத்தின் பேரிலேயே அந்த இடத்தில் தங்கியுள்ளார்கள். விவசாயச் செய்கை உட்பட வாழ்வாதார உதவிகள் அவர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளன.

அவர்கள் சொந்த கிராமத்திற்கு செல்லத் தயாரானால் அதற்குரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்" என்றார்.
 
"காட்டு யானைகள் தொடர்பாக இக்கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள யானைகள் பாதுகாப்பு மின்சார வேலி மூலம் தீர்வு காணப்படும்" எனவும் அவர் கூறினார்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .