-மாணிக்கப்போடி சசிகுமார்
உன்னிச்சை நீர்ப்பாசனத்துக்குட்பட்ட காலபோக விவசாயச் செய்கையின் இறுதிக் காலத்தில் நீர் இல்லாமையினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உன்னிச்சை நீர்ப்பாசனத்துக்குட்பட்ட காலபோக செய்கை 50 வீதமான பகுதி விளைந்த நிலையில் ஏனைய வயல்கள் விளையாத நிலையில் உள்ளன. இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி முதல் உன்னிச்சைக் குளத்தில் இருந்து வழங்கப்பட்ட நீர் பூட்டப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான விவசாய வயல்கள் நீர் இன்றி வாடி வருகின்றன.
கடந்த டிசெம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதமடைந்த ஆற்றுக்கட்டுக்கள் வாய்க்கால் கட்டுக்களை நீர்ப்பாசனத் திணைக்களம் திருத்துவதில் ஏற்பட்ட காலதாமதத்தினால் தற்போது நீர் இன்றிப் பாதிக்கப்பட்டுள்ள வயல்கள் விதைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு விதைப்புப் பிந்தியதால் விளைச்சல் பிந்தியுள்ளது. இந் நிலையில் நீர்ப்பாசனத் திணைக்களம் நீரைப் பூட்டியதனால் பொன்னாங்கண்ணிச்சேனை, கோழியண்டாறு, முள்ளாமுனை, மகிழவெட்டவான், கரவெட்டி போன்ற பகுதிகளில் கதிர்பறிந்த நிலையிலும் காய் ஆன நிலையிலும் அரைவாசி விளைந்த நிலையிலும் உள்ளதனால் தற்போது இப் பகுதிகளுக்கு நீர் தேவைப்படுவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இப் பகுதிகளில் விளைச்சல் 50 வீதம் முதல் 75 வீதம் வரை விளைச்சல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் விவசாயிகள் உடனடியாக பாதிக்கப்பட்ட வயல்களுக்கு நீரை ஒரு தடவையாவது வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீர்ப்பாசனத் திணைக்களத்திடமும் அரசாங்க அதிபரிடமும் நீரை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்த போதும் இதுவரை நீர் வழங்க முன்வரவில்லை எனவும் தெரிவித்தனர்.