2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தொழிலாளர்களின் சம்பள விவகாரம்; பிரேரணை நிறைவேற்றம்

Kogilavani   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வுக் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இது தொடர்பில், சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றுத் தெரிவித்தும் நுவரெலியா மாநகர சபையில், பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நுவரெலியா மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம், மாநகர சபைக் கூட்ட மண்டபத்தில், மாநகர சபையின் முதல்வர் சந்தனலால் கருணாரத்ன தலைமையில், நேற்று முன்தினம் (10) நடைபெற்றது.

இதன்போது சபையின் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் எம்.கேதீஸ்வரன்,  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுத் தொடர்பான பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் முதுகெலும்பாகக் இருந்துவரும் தோட்டத் தொழிலாளர்கள், தமது நியாயமான சம்பளத்துக்காகப் போராடி வருவதாகக் குறிப்பிட்டதோடு, பெருந்தோட்டத் தொழிலாளர்கள், பாரிய பொருளாதார பிரச்சினையையும் எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்காகச் செய்துகொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தத்தில்,  மாற்றம் அவசியம் என்று வலியுறுத்திய அவர், இவ்விடயத்தில், ஜனாதிபதி, பிரதமர், தொழில் அமைச்சர் என பலரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களை உள்ளடக்கி, நாளாந்த வாழ்க்கை வருமானத்தை உயர்த்தும் வகையில் சம்பள உயர்வு ஒன்றைப் பெற்றுத்தர,  சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்  இதன்போது கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கைகளை பிரதானப்படுத்தியே, இந்தப் பிரேரணையை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், பிரேரணையை சபையின் உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .