2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கையை ஏகாதிபத்திய நாடுகளிடம்; அடிமையாக்க அரசு தயாரில்லை: பிரதமர்

Kogilavani   / 2013 ஜூலை 23 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


'வடமாகாணத்திற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கி மீண்டும் இலங்கையை ஏகாதிபத்திய நாடுகளிடம் அடிமையாக்க இந்த அரசு ஒருபோதும் தயாரில்லை' என்று பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார்.

கண்டி, குருதெனியாவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

 'வடக்கிற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதுதான் நிறந்தரத் தீர்வு என சிலர் கருதுகின்றனர். இருந்த போதும் அது மீண்டும் ஒரு யுத்தத்;திற்கு வழிவகுக்கும்.  ஜனாதிபதியால் முப்பது வருட யுத்தம் முற்றுமுழுதாக நிறைவு செய்து வைக்கப்பட்டதாகக் கருதக் கூடாது.

யுத்தத்தால் எமக்கு உரித்தானது எதுவும் கிடையாது. ஆனால் யுத்தத்தால் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டவைகளே அதிகமாகும்.
ஒரு சிறிய குழுவே எம்மால் பெறப்பட்ட சமாதானத்தை இல்லாதொழிக்க வெளிச் சக்திகளுடன் இணைந்து செயற்படுவதைக் காணமுடிகிறது.

வெளிநாட்டு சூழ்சிகளால் ஒரு சிறியமக்கள் திசை திருப்பப்பட்டாலும் பொதுவான இலங்கை வாழ் சிங்கள், தமிழ், முஸ்லிம், மலாய், பறங்கி இன மக்கள் ஒருபோதும் பிரிந்து நிற்கவில்லை. ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள்' என்பது புதுக்கதையல்ல.

யுத்தத்தால் எத்தனை உயிர்கள் பலியாகின. வெளிநாடுகளில் இருந்துகொண்டு பிரிவினைவாதம் பேசும் எவராவது உள்ளூரில் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி ஏதும் தேடிப்பார்க்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை. இப்படியான நிலையில் தான் பொலிஸ் அதிகாரம் பற்றிப் பேசப்படுகிறது.

இந்தியாவில் ஏழு கோடியே என்பது இலட்சம் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு ஒரு தனித் தாய் நாடு அமைவது பற்றி எவரும் பேசுவதில்லை.

இலங்கையில் 31 இலட்சம் தமிழ் மக்கள் உள்ளனர். இவர்களுள் 15 இலட்சம் பேர் மட்டுமே வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளனர். மிகுதி 16 இலட்சம் பேரும் தெற்கில் எம்முடன் வாழ்கின்றனர். அப்படிப் பெரும்பான்மைத் தமிழர் எம்முடன் இருக்கையில் ஒரு சிலர் மட்டும் தனியான ஆட்சியை அல்லது நிர்வாகத்தைக் கோருவது எப்படி நியாயமாகும்?

மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியில் பல்வேறு குழுக்களுக்கும் தேவையான பல்வேறு நடைமுறைகளை அமுல்படுத்த இடமளிக்கப்படவில்லை. எனவே இங்கு ஒரே நாட்டினுள் குட்டி இராஜ்யங்களை அமைத்துக் கொள்ள முடியாது. எல்லோருக்கும் சாதாரணமான அல்லது பொதுவான சூழலே ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

யுத்த முடிவை அடுத்து பாரிய அபிவிருத்தி எமது நாட்டில் உருவாகியுள்ளது. உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பன இதை ஏற்றுக் கொண்டுள்ளன.

இதன் காரணமாகவே எமது வாழ்க்கைச் செலவு சற்று அதிகரித்துள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .