2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘அனர்த்தங்களின் பின்னர் நோய்கள் அதிகரிக்கும்’

Editorial   / 2017 ஜூன் 04 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை, தற்போது சற்றுத் தணிந்துள்ள நிலையில், அவ்வாறான அனர்த்தங்களின் பின்னர் ஏற்படக்கூடிய நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன” என, சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

“நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களின் மருந்துவகைகள், அனர்த்தங்களினால் அழிவடைந்திருக்க வாய்ப்புள்ளது. அதனால், உடனடியாக மருத்துவ சிகிச்சை நிலையங்களுக்குச் சென்று, தங்களுக்குரிய மருந்துவகைகளை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

“இதேவேளை, இக்காலப்பகுதியில் அதிகளவில் பரவக்கூடிய டெங்குக் காய்ச்சலைத் தடுப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

“பச்சை மரக்கறி வகைகள் அல்லது இலை வகைகளை உணவாக எடுத்துக்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், வயிற்றோட்டம் மற்றும் வாந்திபேதி போன்ற நோய்கள் ஏற்பட இடமுண்டு.

“பிரசவத்துக்குத் தயாரான நிலையில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட வேண்டும்.

“வெள்ளநீரில் விளையாடுவதையோ அல்லது ஓடங்களைச் செலுத்துவதையோ தவிர்க்க வேண்டும். வெள்ளத்தில் மூழ்கியிருந்த வீடுகளில் மீளக்குடியேறும் போது, வீடுகளின் பலம் தொடர்பிலும் பரிசோதிக்க வேண்டும்.

“எப்போதும், சிறுநீர் மற்றும் மலங்களை, மலசலகூடங்களிலேயே கழிக்க வேண்டும்.
பிளாஸ்டிக் மற்றும் பாத்திரங்களை வீசும் போது, நுளம்புகள் பெருகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“வெள்ளநீரில், எலிகளின் சிறுநீர்கள் கலந்திருப்பதால், வெள்ளநீரில் இருப்பவர்கள், எலிக்காய்ச்சலுக்கான நுண்ணுயிர்க்கொல்லி (அன்டிபயோட்டிக்ஸ்) மருந்தை ஏற்றிக்கொள்ள வேண்டும்.

“வெள்ளப்பிரதேசங்களில் அமைந்துள்ள அனைத்துக் கிணறுகளையும் இறைத்து, குளோரின் கலந்துவிட வேண்டும்.

“வெள்ளப்பகுதியில் உள்ளவர்களின் கால்களில் காயங்கள் ஏற்பட்டிருந்தால், மருத்துவர்களின் உதவிகளை உடனடியாக நாடவேண்டும்” எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .