2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக பேச விரும்பவில்லை’

எம். றொசாந்த்   / 2018 மார்ச் 20 , மு.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சட்டம் இயற்றி அதற்கு என ஒரு குழுவையும் நியமித்து உள்ளோம். ஆகவே அது தொடர்பில் திரும்பவும் பேச விரும்பவில்லை” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்தார்.

யாழ்.பத்திரிசியார் கல்லூரியில் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை நேற்று (19) திறந்து வைத்து பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

“இந்தப் பாடசாலைக்கு வரும் வழியில், காணாமல் போனோர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. காணாமல் போனோர் விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளதுடன், அதற்கான ஒரு குழுவினையும் நியமித்துள்ளோம்.

காணாமல் போனோர்களின் குடும்பத்தின் நலன் விடயங்களை பார்ப்பதற்கான அந்தக் குழு செயற்பட்டு வருகின்றது. காணாமல் போனோர் தொடர்பான வேலைத்திட்டத்தினை தெளிவாக மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன், தெளிவுபடுத்தியுமுள்ளோம்.

ஆகவே, காணாமல் போனோர் விடயம் தொடர்பாக திரும்பவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து நாட்டிற்காக செயற்படுவோம்.

இனங்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவோம். இனங்களுக்குள் உள்ள முறுகல் நிலையை இல்லாமல் ஒழிப்போம். அதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்.

எமது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது உரையின் போது, கடந்த தேர்தலில் வடமாகாண மக்கள் எனக்கு அளித்த ஆதரவினைப் பற்றிச் சொன்னார்.

நான் அந்த செய்ந்நன்றியை மறக்கவில்லை. அந்த செய் நன்றியை மறக்காத காரணத்தினால் தான் வடமாகாணத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்கின்றேன்.

எமக்குப் பல அரசியல் பொருளாதார, சமூகப் பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன், அதற்கு அப்பால் செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது. அதுவே, மனிதாபிமானம் என்ற இரக்கமும் நெருக்கமும்” என்றார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .