2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மலேசிய அரசு வழங்கிய பெருந்தொகை பணம் எங்கே?: அனந்தி சசிதரன்

George   / 2016 ஜூலை 23 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

'இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளிலும் பல அமைப்புக்கள் பெருந்தொகை நிதியைத் திரட்டி வந்துள்ளன. அவ்வகையில் கடந்த 2012ஆம் ஆண்டு மலேசியாவில் தமிழர் பேரவை மலேசியா என்ற அமைப்பு பெருந்தொகைப் பணத்தை மலேசிய அரசிடமிருந்து பெற்றிருக்கிறது. எனினும் இப்பணத்துக்கு என்ன நடந்தது என தெரியவில்லை' என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு சனிக்கிழமை (23) அனுப்பியுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,   'இந்த பணத்தொகையானது உண்மையில் எமது மக்களைச் சென்றடையுமானால் நிச்சயம் இன்று இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு கையேந்தும் நிலையோ, வறுமையின் உச்சத்தில் தற்கொலைகளுக்கு தூண்டப்படும் துர்ப்பாக்கிய நிலையோ ஏற்பட்டிருக்குமா என்ற ஏக்கம் எங்கள் இதயத்தை பிழிகின்றது.

போரின் காயங்கள் இன்னும் மாறாத அவலங்கள் நிறைந்த இந்தச் சூழலில் மன உளைச்சலுடனும், உடல் அங்கங்களை இழந்து வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வை நகர்த்த முடியாத வறுமையிலும் வாழுகின்ற மக்களின் பெயரால் திரட்டப்பட்ட நிதி எங்கே? மக்களின் பிரதி நிதியாக நாங்களும் வடமாகாண சபையும் இருக்க யார் முலம் இந்த நிதி செலவிடப்பட்டது? அல்லது சேமிப்பில், கிடப்பில் போடப்பட்டுள்ளதா என்ற கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பாக பதிலளிக்கமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எங்களை பொறுத்தவரை மலேசியாவில் இயங்கும் மலேசியத் தமிழர் பேரவை எனும் குறித்த அமைப்பினால் இங்கு எந்த வேலைத்திட்டமும் மக்களை சென்றடைந்ததாக நாம் அறியவில்லை. அவ்வாறு இடம்பெற்றிருந்தால் வரவேற்கும் அதேவேளை அது எந்த அடிப்படையில் எந்த அமைப்பின் ஊடாக செயல்படுத்தப்பட்டது என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதை விரும்புகின்றோம்.

மலேசிய அரசாங்கம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்காக உவந்தளித்த இந்த பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்ட தமிழர் பேரவை மலேசியா அமைப்பின் பொறுப்பதிகாரிகளான திரு.ஆறுமுகம், திரு.பசுபதி, டாக்ரர்.ஐங்கரன், டாக்ரர் குணலட்சுமி ஆகியோர் நிச்சயம் இதற்குரிய விளக்கத்தை எமக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் அந்த அமைப்பு ஆலம் எனும் இடத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திரட்டிய சுமார் ஒரு மில்லியன் மலேசிய ரிங்கட் பணம் என்னவானது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அத்துடன் வன்னிப்பிரதேச மக்களுக்காக இந்த அமைப்பு பெற்றுக்கொண்ட நன்கொடைகள் யாவும் என்னவானது?

மக்களின் பிரதிநிதிகளாக நாம் இருக்க, மூன்றாம் தரப்பினரைக் கொண்டு ஒருவேளை இந்தப் பணம் அறவிடப்பட்டிருந்தால் நிச்சயம் இதில் மக்கள் நன்மை அடைந்திருக்கமாட்டார்கள். மேலும் இதுவரை மக்களுக்காக அவ்வாறான வேலைத்திட்டங்கள் எதுவும் நடந்ததாக நாம் அறியவில்லை.

இங்கு இந்த பண விவகாரத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு சிலரின் தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த விவகாரத்தை தமிழர் பேரவை மலேசியா சரியான முறையில் அணுகா விட்டால் இங்குள்ள சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தயங்கமாட்டோம் என கூறிவைக்கிறோம்.

மக்களுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட பணம் நிச்சயம் மக்களை சென்றடைய வேண்டும். உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .