2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நீர் விநியோக பவுசர்கள் பழுதடைந்த நிலையில்

Kogilavani   / 2010 நவம்பர் 18 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நீர் வடிகாலமைப்புச் சபையின் எட்டு தண்ணீர் பவுசர்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதன் காரணமாக இந்த பவுசர்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த நீர் விநியோக நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களுக்கான நீர் வழங்கலில் தடங்கலும் தாமதங்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி, தட்டுவன் கொட்டி, மற்றும் செல்வாநகர் போன்ற இடங்களில் குடிநீர் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் தீவுப் பகுதியில் குடிநீர் விநியோகத்தில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதில் நான்கு பவுசர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவை எனவும் நான்கு பவுசர்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்குரியவை என்றும் நீர் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரி தெரிவிக்கிறார்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட நான்கு பவுசர்களும் கடந்த ஆண்டில் வவுனியா இடம் பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களில் பயன்படுத்தப்பட்ட பவுசர்களாகும் எனவும் கூறப்படுகிறது.

பழுதடைந்த நிலையிலுள்ள இந்த எட்டு பவுசர்களையும் சீர் செய்வதற்கு நிதி இன்மையே காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் குடிநீர்ப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அந்த மாவட்டத்திற்குரிய நான்கு பவுசர்களையும் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைக்கு உதவும்படி நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தைப் பணித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .