-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார், நானாட்டான் பிரதேச செயலக பிரிவிலுள்ள பொன்தீவுகண்டல் கிராம அலுவலர் பிரிவில் மீள் குடியேற்றத்திற்கான காணி பகிர்ந்தளித்தலில் ஏற்பட்ட பிணக்குகளைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை காலை குறித்த காணியில், இடம் பெயர்ந்த முஸ்ஸிம் மக்கள் அக்காணிகளில் வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டமையினால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பொன்தீவுகண்டல் கிராமத்தில் காணி பகிர்ந்தளிப்பு தொடர்பாக நீண்ட நாள் இரு சமூகத்தினருக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நானாட்டான் பிரதேசச் செயலாளர், குறித்த காணியினை இரண்டாக பிரித்து இடம்பெயர்ந்த முஸ்ஸிம் மக்களுக்கும், ஏனைய காணியினை பொன்தீவுகிராம மக்களுக்கும் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முஸ்ஸிம் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட காணியில் இன்று சனிக்கிழமை காலை முதல் அந்த காணியின் உரிமையாளர்கள் வீட்டு திட்ட பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பொன்தீவுகண்டல் கிராம மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
வீட்டு வேளைத்திட்டம் இடம்பெறும் பகுதியில் ஒன்று திரண்ட மக்கள், எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் நூற்றுக்கணக்கான பொலிஸாரும், கலகம் அடக்கும் பொலிஸாரும் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
பின்னர், பொலிஸார் -பொன்தீவுகண்டல் கிராம மக்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்களை மேற்கொள்ள எத்தனித்தனர். இந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்டனி விக்டர் சோசை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம், அளவக்கை பங்குத்தந்தை சுரேஸ் றெவல், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பொன்தீவுகண்டல் கிராம மக்களுடன் கலந்துரையாடினர்.
இந்த நிலையில் தற்போது முஸ்ஸிம் மக்களுக்கு நானாட்டான் பிரதேச செயலகத்தினால் ஒதுக்கப்பட்ட பொன்தீவுகண்டல் பகுதியில் உள்ள காணியில் முஸ்ஸிம் மக்கள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.