2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சிறையுடைப்பில் 900 பேர் தப்பினர்

Editorial   / 2017 ஜூன் 12 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியிலுள்ள சிறைச்சாலை ஒன்றின் மீது, இனந்தெரியாத ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, 11 பேர் கொல்லப்பட்டதோடு, 900க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள், தப்பிச் சென்றுள்ளனர் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெனி என்ற இடத்திலுள்ள கங்வாயி சிறைச்சாலை, நேற்று  மாலை வேளையில் தாக்கப்பட்டது என, வடக்கு கிவு மாகாணத்தின் ஆளுநர் ஜூலியன் பாலுக்கு தெரிவித்தார்.

“ஆயுததாரிகளுக்கும் படையினருக்கும் இடையிலான மோதலின் போது, பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 8 பேர் உள்ளிட்ட 11 பேர் கொல்லப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

“சம்பவம் இடம்பெற்ற போது, 966 சிறைக்கைதிகள் இருந்தனர். தற்போது 30 பேர் மாத்திரமே எஞ்சியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, பெனி பகுதியிலும் அருகிலுள்ள நகரான புடெம்போவிலும், ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகளும் படையினரும் மாத்திரம், நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அடிக்கடி மோதல்கள் இடம்பெறும் வடக்கு கிவு மாகாணத்திலுள்ள பெனி, 2014ஆம் ஆண்டிலிருந்து, வன்முறைகள் அதிகமாக இடம்பெறும் இடமாகக் காணப்படுகிறது. இந்தக் காலப்பகுதியில், சுமார் 700 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என, தரவுகள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோர், கூரான ஆயுதங்களால் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

சிறைச்சாலை மீதான இந்தத் தாக்குதல், குறித்த பிரதேசத்தில் குழப்பங்களுக்குக் காரணமானதாகக் கூறப்படும் தோழமை ஜனநாயகப் படைகளால், பொலிஸ் நிலையமும் வழக்கும் தொடருநர் அலுவலகமும் தாக்கப்பட்ட மறுநாள் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல், கொங்கோ ஜனநாயகக் குடியரசில், கடந்த மாதத்தில், இரண்டு சிறையுடைப்புகள் இடம்பெற்றிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X