2024 மே 03, வெள்ளிக்கிழமை

அயோத்தியில் இராமர் கோவில் விவகாரம்: சமரசத் தீர்வும் சந்திக்கப் போகும் தேர்தலும்

எம். காசிநாதன்   / 2019 மார்ச் 12 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

1850களில் தொடங்கப்பட்ட அயோத்தியில், இராமர் கோவில் கட்டும் பிரச்சினை, சுதந்திர இந்தியாவில், பல பிரதமர்களைக் கண்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை.

பிரதமராக இருந்த நேரு, ராஜீவ் காந்தி, வி.பி. சிங், சந்திரசேகர் என்று தொடர்கதையாகி, பிரதமராக நரசிம்மராவ் இருந்தபோது, ஒரு ‘வலுக்கட்டாயமான’ முடிவுக்கு வந்தது. அதாவது, அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, பிரதமராக நரசிம்மராவ் இருந்தபோது “க்ளைமாக்ஸ்” காட்சியை எட்டியது.

பாரதிய ஜனதாக் கட்சியின் இன்றைய வளர்ச்சிக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருக்கும் எல்.கே. அத்வானி, நாடு முழுவதும் ஒரு ரத யாத்திரை நடத்தி, இறுதியில் அயோத்தியில் கூடிய கரசேவகர்கள், அங்கிருந்த பாபர் மசூதியை, 1992இல் இடித்தனர். அதற்காக, பா.ஜ.கவின் மூன்று மாநில அரசாங்கங்கள், அரசியல் சட்டப் பிரிவு 356ஆவது பிரிவின் கீழ், அன்றிருந்த பிரதமர் நரசிம்மராவால் கலைக்கப்பட்டன.

உத்தர பிரதேச மாநில முதலமைச்சராக இருந்த கல்யாண்சிங், நீதிமன்ற அவமதிப்புக்காக, உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அந்தச் சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றியுள்ள நிலங்களை, தனியானதோர் அவசரச்சட்டம் கொண்டுவந்து, மத்திய அரசாங்கம் கைப்பற்றியது.

அயோத்திக் கலவரம் குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த லிபர்கன் தலைமையில், விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, 17 வருடங்களுக்குப் பிறகே, அறிக்கையைக் கொடுத்தது. அந்த விவகாரத்தில், அத்வானி மீது போடப்பட்ட வழக்கு, கடந்தமுறை குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத சூழலை ஏற்படுத்தியது. இப்படி ‘அயோத்தி அரசியல்’ புயலில் பலர் சிக்கியிருக்கிறார்கள் என்பதுதான் கடந்தகால வரலாறு.  

இவ்வளவு பரபரப்பு மிகுந்த இராமர் கோவில் பிரச்சினையில், 2010இல் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, திருப்புமுனையாக அமைந்தது. தொல்பொருள் ஆராய்ச்சித்துறை நடத்திய பல்வேறு ஆய்வுகளைச் சுட்டிக்காட்டி, அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததற்கு முன்பே, அங்கு கோவில் இருந்தது என்றும் இராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் முடிவு செய்தது.

“இராமர் கோவில் இருந்ததென்று முடிவுசெய்த தீர்ப்பை வரவேற்கிறோம்” என்று, அன்றைக்கே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, அறிக்கை வெளியிட்டது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், அயோத்தியில் உள்ள அந்த இடத்தை மூன்றாகப் பிரித்து, அதில் ஒரு பங்கில் இராமர் கோவில் கட்டவும் இன்னொரு பங்கில் வக்ப் வாரியத்துக்கும், மூன்றாவது பங்கு, இந்து அமைப்புக்கும் கொடுக்க உத்தரவிட்டது. அந்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் தீர்ப்புக்கு எதிராக, 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டுமென்று, உச்ச நீதிமன்றத்துக்கே  இந்து அமைப்புகள் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. “அயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்” என்று, மத்திய சட்ட அமைச்சராக இருக்கும் ரவிசங்கர் பிரசாத்தே, உச்ச நீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்.

பா.ஜ.கவின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ராம்மாதவ், “அயோத்தி வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்கவில்லை என்றால், இராமர் கோவில் கட்டுவதற்கான மற்ற வழிமுறைகளை பா.ஜ.க ஆராய வேண்டியிருக்கும்” என்றே எச்சரித்தார்.

ஆனால், இதுபோன்ற எந்த அழுத்தத்துக்கும் உச்சநீதிமன்றம் அசைந்து கொடுக்கவில்லை. நீதித்துறை தலைநிமிர்ந்து நின்றதென்றே கூறவேண்டும். குறிப்பாக, தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய், அயோத்தி வழக்கை மிகவும் நிதானமாகக் கையாண்டிருக்கிறார்.

அயோத்தி வழக்கை விசாரிக்க, ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைத்து, அந்த அமர்வு, இது தொடர்பான முடிவுகளை எடுக்கும் என்று தலைமை நீதிபதி அறிவித்தார்.

இந்நிலையில், அந்த அமர்வில் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி யூ.யூ.லலித் விலகிக் கொண்டார். புதிதாகத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அமைக்கப்பட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுதான், இப்போது சமரசத் தீர்வுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

இப்படியொரு நிலைப்பாட்டுக்கு,  உச்சநீதிமன்றம் முன்வந்தது பாராட்டத்தக்கது என்றே, நாட்டிலுள்ள நடுநிலையாளர்கள் அனைவரும் கருதுகிறார்கள். அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதென்பது, இந்தியாவிலுள்ள வடமாநிலங்களில் மிகவும் உணர்ச்சிகரமான பிரச்சினை.

பா.ஜ.க அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளாக முன்வைத்து வந்த நேரத்தில், அயோத்தியில் இராமர் என்ற முழக்கத்தை முன்னெடுத்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டுமென்றே பா.ஜ.க உயர்மட்டத் தலைவர்கள் முடிவு எடுத்திருந்தார்கள்.

ஏனென்றால், இராமர் கோவில் கட்டுவது, மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு நெஞ்சுக்கு நெருக்கமான கொள்கை. மத்தியில் பா.ஜ.க ஆட்சியும் இராமர் கோவில் கட்டவேண்டிய அயோத்தியிலுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியும் இருக்கின்ற நேரமே, இதற்கு மிகவும் உகந்த நேரம் என்று பா.ஜ.க தலைவர்கள் கருதினார்கள்.

குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் இராமர் கோவில் கட்டும் போராட்டத்தின் முன்னணியில் நின்ற யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக இருக்கின்ற நேரத்தில், இது சாத்தியமாகும் என்றே எண்ணம் ஏற்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில், “எங்களால் 24 மணிநேரத்தில் இராமர் கோவில் கட்டும் பிரச்சினையைத் தீர்க்க முடியும்” என்று, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே பேட்டியளித்தார் அந்த முதலமைச்சர்.

ராகுல் காந்தி, சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியால், இராமர் கோவில் கட்டுவதற்கு எதிராகப் பேசமுடியாது என்பதும் பா.ஜ.கவுக்கு  நன்கு தெரியும். அதை மனதில் வைத்தே, சில வாரங்களுக்கு முன்பு வரை, அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதை முன்வைத்து, தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பே நிலவியது. ஆனால், புல்வாமா தீவிரவாதத் தாக்குதல், பாகிஸ்தானுக்குள் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படைத் தாக்குதல் போன்றவற்றால் அயோத்தி விவகாரம் திசை மாறி, இப்போது தேசப் பாதுகாப்பு என்பதை முன்னுக்கு வைக்கும் முழக்கத்தை, பா.ஜ.க முன்னணித் தலைவர்கள் தொடங்கிவிட்டார்கள்.

இதுபோன்றதொரு சூழ்நிலையில் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சமரசமாகத் தீர்வு காணுவதே அமைதியை நிலைநாட்ட உதவும் என்ற ரீதியில் முடிவு செய்து அளித்துள்ள இந்தத் தீர்ப்பு, நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை, அமைதியான சூழலில், விருப்பு, வெறுப்பற்ற சூழ்நிலையில் நடத்துவதற்கு வழிசமைத்துக் கொடுத்திருக்கிறது. சமரசத் தீர்வுகாண எட்டு வாரங்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டு, முதற்கட்ட அறிக்கையை நான்கு வாரங்களுக்கும் தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், சமரசத் தீர்வு தொடர்பான நடவடிக்கைகள் இரகசியமாக இருக்க வேண்டும் என்ற உத்தரவு, தேர்தல் காலத்தில் உச்சநீதிமன்றம் எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இந்தப் பிரச்சினையை அணுகியிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

ஆகவே, எந்த மத ரீதியான பிரச்சாரங்களுக்கும் இடமளிக்காமல், தேர்தல் சுதந்திரமாக நடைபெறுவதற்கு, இது ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கிறது. இந்திய ஜனநாயகம், மிக வலிமையானது. அதில், அமைதியான சூழலில் வாக்களிக்க வேண்டியது மக்களுக்கு இன்றியமையாதது. ஜனநாயகத்தின் திருக்கோவிலாக இருக்கும் நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்யும் தேர்தல் ஜனநாயகத்துக்கு  அயோத்திப் பிரச்சினைக்கு சமரசத் தீர்வு என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, வரலாற்றுச் சிறப்புமிகுந்த உத்தரவாக அமைந்திருக்கிறது.

இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு, மிகப்பெரிய நிம்மதியாக மட்டுமல்ல, நேர்மையான தேர்தலை நடத்துவதற்கும், ஒரு முக்கிய நிவாரணமாகவே அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அயோத்தியில் இராமர் கோவில் என்பது, இந்துக்களின் கோரிக்கை. அங்கே, பாபர் மசூதி என்பது இஸ்லாமியர்களின் கோரிக்கை. இவை இரண்டையும் நீதிமன்றத்தில் தீர்ப்பதை விட, சமரசத் தீர்வு மூலம் தீர்க்க வேண்டும் என்ற முடிவு, தேர்தல் களத்துக்கு வலுச் சேர்த்துள்ளது.

ஆகவே, அயோத்திப் பிரச்சினையில் எந்தக் கட்சிக்கு வெற்றி, தோல்வி என்பது, சமரசத் தீர்வின் இறுதியில் வரப்போகிறது. ஆனால் இது, இந்திய நாட்டின் தேர்தல் ஜனநாயகத்துக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி. அந்த வெற்றிக்கு வித்திட்டிருப்பது இந்திய உச்சநீதிமன்றம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .