2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கல்முனைக் கோபம்: கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்?

புருஜோத்தமன் தங்கமயில்   / 2019 ஜூன் 26 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறையோடு செயற்படவில்லை என்கிற கோபம், தமிழ் மக்கள் மத்தியில் பலகாலமாக உண்டு.   

கடந்த நான்கு ஆண்டுகளாக, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கான ஒத்துழைப்பை, நிபந்தனைகள் ஏதுமின்றிக் கூட்டமைப்பு வழங்கி வந்திருக்கின்றது. குறிப்பாக, மைத்திரியின் ‘ஒக்டோபர் சதிப்புரட்சி’க் காலத்தில், அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக, கூட்டமைப்பு வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு என்பது, நேரடிப் பங்காளிக் கட்சிகள் வெளிப்படுத்தியதைக் காட்டிலும் அதிகமானது. அப்படியான நிலையில், ‘கல்முனை வடக்கு (தமிழ்) உபபிரதேச செயலகத்தை, முழு அதிகாரமுடைய பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும்’ என்கிற, அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களின் மூன்று தசாப்த காலக் கோரிக்கை தொடர்பில், அரசாங்கத்தைக் காப்பாற்றுவதில் வெளிக்காட்டிய அக்கறையின் ஒரு பகுதியையேனும், கூட்டமைப்பு வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அது, இல்லாதபோது, மக்கள் கோபம் கொள்வது தவிர்க்க முடியாதது.  

கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறை, இரண்டு தளங்கள் சார்ந்தது. முதலாவது, யாழ். மய்யவாத சிந்தனைகளில் நின்று, தமிழ்த் தேசிய அரசியலைப் பேசுவது.  இரண்டாவது, மேற்கு நாடுகளையும் இந்தியாவையும் பகைத்துக் கொள்ளாது அரசியலை முன்னெடுப்பது.  

தமிழ்த் தேசிய அரசியல், அனைத்துத் தரப்புத் தமிழ் மக்களின் எண்ணங்களையும் உண்மையாக உள்வாங்கி, திரட்சிபெற வேண்டும். ஆனால், அவ்வாறான திரட்சியைத் தமிழ்த் தேசிய அரசியல் பெற்றிருக்கவில்லை.   

குறிப்பாக, யுத்தத்துக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில், தமிழ்த் தேசிய அரசியல் என்பது, யாழ். மய்யவாத சிந்தனைகளின் ஒன்றைப் புள்ளியாக மாறியது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவர், யாழ். மய்யவாத அரசியலின் குறியீடாகவே இருக்கிறார். 

தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில், கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள், வெளிப்படுத்திய அர்ப்பணிப்பின் அளவு அதிகமானது. கிழக்கிலிருந்து வந்த தலைவர்கள், இயக்க முக்கியஸ்தர்கள் சிலர் வழிதவறிச் சென்றிருக்கலாம். ஆனால், மக்கள் எப்போதுமே தமிழ்த் தேசியத்தின் வழி, அதன் ஆணிவேரைப் பலப்படுத்தி வந்திருக்கிறார்கள். அப்படியான நிலையில், அந்த மக்களின் கோரிக்கைகள் சார்ந்து, தமிழ்த் தேசிய அரசியலும் தலைவர்களும் உண்மையாகச் செயற்பட்டிருக்க வேண்டும். அதுவும், ஏனைய இனத்தவரின் ஆக்கிரமிப்பால், தமது பாரம்பரிய நிலங்களையே இழந்து வருகின்ற கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புகள் சார்ந்து, அக்கறையோடு இயங்கி இருக்க வேண்டும்.  

கல்முனை வடக்கு உபபிரதேச செயலகம் உருவாக்கப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட நாவிதன்வெளி, சாய்ந்தமருது உள்ளிட்ட பல உபபிரதேச செயலகங்கள், முழு அதிகாரமுடைய பிரதேச செயலகங்களாகப் பல காலங்களுக்கு முன்னரேயே தரமுயர்த்தப்பட்டு விட்டன.   

அப்படியான நிலையில், இனத்துவ அடிப்படையில் தொடர்ச்சியாக அடக்கப்பட்டு வருகின்ற அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள், தமக்கென இருக்கின்ற பிரதேச செயலகத்தை, முழு அதிகாரமுடைய கட்டமைப்பாகக் கோருவதில் எந்தத் தவறும் இல்லை.  

அரசியல் தீர்வு தொடர்பிலான அனைத்து உரையாடல்களிலும், முஸ்லிம்களுக்கான தனி அலகு என்கிற விடயத்தைத் தமிழ்த் தரப்புகள் முழு மனதோடு முன்வைத்து வந்திருக்கின்றன.   குறிப்பாக, முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை (நிலத்தொடர்பற்ற நிலையில் இருந்தாலும், அவற்றை) இணைத்து உருவாக்கவேண்டிய தனி அலகு பற்றிப் பேசப்பட்டு வந்திருக்கின்றன. 

அப்படியான நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், நிலத்தொடர்பற்ற பகுதிகள் என்கிற விடயத்தைச் சுட்டிக்காட்டிக் கொண்டு, அம்பாறை மாவட்ட முஸ்லிம் தலைமைகள், தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டு வருவது என்பது, ஏற்றுக்கொள்ள முடியாதது.   

இதனை, அதிக தருணங்களில், ‘கண்டும் காணாமல்’ இருந்ததுதான், கூட்டமைப்பு மீதான கோபம் வெளிப்படுவதற்கும், அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு, பௌத்த மதகுருமாரும் அரசியல் முகவர்களும் உள்நுழைவதற்குக் காரணமாகும்.  

கல்முனைப் போராட்டக் களத்துக்கு, அரசாங்கத்தின் உறுதிப்பத்திரத்தை(!) எடுத்துக் கொண்டு சென்ற எம்.ஏ. சுமந்திரனுக்கு எதிராக எழுப்பப்பட்ட கோசங்களுக்கு, மக்களைப் பொறுப்பாளிகள் ஆக்க வேண்டியதில்லை. 
அது, சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருந்த, அரசியல் முகவர்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஆனால், முகவர்களின் செயல்களால் எரிச்சலடைந்து, அதனை மக்கள் மீது வெளிப்படுத்த வேண்டிய கட்டத்துக்குக் கூட்டமைப்பு செல்லக் கூடாது. அதேபோல, தன்மீதான மக்களின் உண்மையான கோபத்தைக் கூட்டமைப்பு, சரியாக உணர்ந்து கொள்ளவும் வேண்டும்.  

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில், முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து ஆட்சியமைத்து, நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்கிற விடயத்தைக் கிழக்கு மாகாண மக்களின் எதிர்ப்பையும் மீறி, 2012ஆம் ஆண்டு சம்பந்தன் முன்னெடுத்தார்.  முதலமைச்சர் பதவி உள்ளிட்ட முக்கிய பதவிகள் அனைத்தையும் விட்டுத்தருவதாகக் கூட்டமைப்பு வெளிப்படையாக அறிவித்தது. ஆனால், ராஜபக்‌ஷக்களை எதிர்ப்பதற்குத் திராணியில்லாத நிலையில், ஹக்கீம் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் சென்று, ராஜபக்‌ஷக்களோடு இணைந்து ஆட்சியமைத்தார்.  

அப்படியான நிலையில், 2015ஆம் ஆண்டு, ஆட்சி மாற்றத்துக்குப் பின்னராக கிழக்கு மாகாண சபையில், ஆட்சிக்குழப்பம் ஏற்பட்டபோது, கடந்த காலத்தில் ஏமாற்றிவிட்டு ராஜபக்‌ஷக்களோடு சவாரி செய்த, முஸ்லிம் காங்கிரஸிடம் கூட்டமைப்பு பெருந்தன்மையோடு செயற்பட்டது. அப்போதும், முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து முக்கிய பதவிகளையும் விட்டுக்கொடுத்து ஆட்சியமைத்தது. அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக, எந்தவித நிபந்தனைகளுமின்றி, நல்லெண்ணம் என்கிற ஒற்றைப் புள்ளியில் நின்று சம்பந்தன் செயற்பட்டார். ஆனால், நல்லெண்ணம் என்பது, ஒற்றைத்தரப்பால் மாத்திரம் முன்னெடுக்கப்படுவது அல்ல என்கிற விடயத்தை அவர், புரிந்து கொள்ள மறுக்கிறார். தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாது தவிர்த்தார். 

2015ஆம் ஆண்டு காலத்திலாவது, கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தை ஒரு நிபந்தனையாக, ஏன் முன்வைக்கவில்லை என்பதுதான், கூட்டமைப்பு மீது கிழக்கு மாகாண மக்கள் முன்வைக்கும் கேள்வி.  
கூட்டமைப்பு அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை. அமைச்சரவைப் பத்திரங்களை முன்வைப்பதற்கு முடியாது. ஆகவே, இவ்வாறான விடயங்களில் அதிக காலம் தேவைப்படுவது இயல்பானதுதான் என்கிற வாதம் கூட்டமைப்பால் மக்களை நோக்கிச் சொல்லப்படுகின்றது.   

ஆனால், அரசாங்கத்தோடு, குறிப்பாக ரணிலோடு பேச்சுக்குச் செல்லும் கூட்டமைப்பு, தங்களது கோரிக்கைகள் சார்ந்து உடும்புப்பிடியாக இருப்பதில்லை. எந்தவொரு தருணத்திலும் ராஜபக்‌ஷக்களின் கைகளில் மீண்டும் ஆட்சி செல்லக்கூடாது என்கிற ஒற்றை விடயத்தை வைத்துக் கொண்டு, ரணிலின் இழுப்புகளில் கூட்டமைப்பு விட்டுக்கொடுப்பை, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் நின்று செய்கிறது.   

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னரான, பதற்றமான சூழ்நிலைகளைப் பிடித்துக் கொண்டு, தேரர்கள் தம்முடைய சதிராட்டத்தை வெற்றிகரமாக ஆடி வருகின்றனர். சாந்தியையும் சமாதானத்தையும் போதித்த புத்தனை, நிராவியடி, கன்னியா தொடங்கி தமிழர் நிலங்கள் பூராவும் ஆக்கிரமிப்பின் அடையாளமாக முன்னிறுத்திக் கொண்டு செல்கின்றனர்.  

அதே, தேரர்கள், தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் அக்கறை கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ளும் போது, அதற்குச் சந்தர்ப்பவாத அரசியல் முகவர்கள் ஒத்தோதுவது அயோக்கியத்தனமானது; அந்த அரசியலைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  

சம்பந்தனோ, சுமந்திரனோ அல்லது கூட்டமைப்பிலுள்ள யாராக இருந்தாலும் அரசியல் மாற்றங்களில் போக்கில் செயற்பட வேண்டியிருக்கும். அது, உலக ஒழுங்கிலும் வழக்கமானதுதான். ஆனால், சொந்த மக்களின் குரலை, அதன் ஒவ்வொரு கட்டத்திலும் உள்வாங்கி அதன் போக்கில், பிரதிபலிக்க வேண்டும்.   

தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் பல இருந்தாலும், அந்தக் கட்சிகளை எல்லாம் மீறி, கூட்டமைப்புக்கான ஆதரவைத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வந்திருக்கிறார்கள். அப்படியான நிலையில், அதன் கனதியை, எதிர்பார்ப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்.   

அது, யாழ்ப்பாணத்தின் குரலை மாத்திரமல்ல; அம்பாறையின் குரலையும் கேட்டு வெளிப்படுத்தும் அளவுக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்த் தேசிய அரசியல், சந்தர்ப்பவாத அரசியல் முகவர்களாலும் தென்னிலங்கையாலும் இலகுவாகச் சிதறடிக்கப்பட்டுவிடும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .