2026 பெப்ரவரி 25, புதன்கிழமை

“அந்த நேரத்தில் கதறி அழுதேன்... எல்லோரும் பதறிட்டாங்க”

S.Renuka   / 2026 பெப்ரவரி 25 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக பல ஆண்டுகள் கோலோச்சியவர் மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர், தனது கண்களின் அழகுக்காகவே ரசிகர்களிடையே தனி வரவேற்பைப் பெற்றவர்.

2009ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்ட மீனா, திருமணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து ஓரளவு விலகினார். இவர்களின் மகள் நைனிகா, ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் கணவரை இழந்த மீனா, அந்த இழப்பைத் தாண்டி தற்போது மீண்டும் திரைப்படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் தனது இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்திகளை மீனா கடுமையாக மறுத்தார். “எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்பதையே மறந்து இஷ்டப்படி எழுதுகிறார்கள். இதை ஏற்க முடியவில்லை” என அவர் வருத்தம் தெரிவித்தார்.

அதே பேட்டியில், குழந்தை நட்சத்திரமாக நடித்த காலத்தில் ரஜினிகாந்த் பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான ‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்தில் நடித்தபோது, தன்னிடம் சூடு வைக்கும் காட்சி எடுக்கப்பட்டதாகவும், அது உண்மையாக நடக்கப்போகிறது என நினைத்து பயந்து கதறி அழுததாகவும் கூறினார்.

“யார் சமாதானப்படுத்தினாலும் கேட்கவில்லை. தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்தேன். பின்னர் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் என்னை தூக்கிக்கொண்டு சென்று சாக்லேட் வாங்கி கொடுத்து, ‘உண்மையில் சூடு வைக்கமாட்டோம்’ என்று சொன்னபின் தான் அமைதியாகினேன். அந்த சம்பவத்தை நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன்” என்று மீனா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தற்போது மீனா நடித்துள்ள ‘சீக்ரெட் ஸ்டோரிஸ் – ரோஸ்லின்’ என்ற வெப் தொடர் வரும் 27ஆம் திகதி முதல் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. அவரது ரசிகர்கள் இந்த தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .