2026 மார்ச் 05, வியாழக்கிழமை

கீதாவை தவிர வேறு யாருமில்லை?

Yuganthini   / 2017 ஜூலை 03 , மு.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.பியான கீதா குமாரசிங்ஹவைத் தவிர, வேறெந்த உறுப்பினரும் தற்போதைய நாடாளுமன்றத்தில் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கின்ற உறுப்பினர்கள் இல்லையென, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் தெரிவித்தார்.   

எனினும், இந்த விவகாரம் தொடர்பில் இன்னுமின்னும் தேடிப் பார்ப்பதற்காக முழுமையான புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

பிவிதுரு ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில, தகவலறியும் சட்டத்தின் ஊடாக, இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் அடங்கிய அறிக்கையை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம், மே மாதம் 8ஆம் திகதியன்று கோரியிருந்தார்.   

நாடாளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்ஹ, சுவிட்ஸர்லாந்துப் பிரஜையாக இருப்பதால், எம்.பி பதவியை வகிப்பதற்கு அவர் தகுதியற்றவர் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.   

கம்மன்பில எம்.பி கேட்டிருந்தமைக்கு அமைவாக, இந்தத் தகவல்கள், பகுப்பாய்வு அறிக்கை திணைக்களத்தின் ஊடாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கை நிறைவடைந்துள்ளது என்றும் இரண்டாம்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.   

முழுமையான தகவலடங்கிய இரண்டாவது அறிக்கை, இன்னும் இரண்டொரு வாரங்களுக்குள் விநியோகிக்க முடியும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.   

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட உறுப்பினர்களின் முழுமையான விவரம் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டபோது, எம்.பிக்களின் விவரங்கள் அடங்கிய அறிக்கை, நாடாளுமன்ற செயலாளர் காரியாலத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.   

கீதா குமாரசிங்ஹ எம்.பி, இரட்டைப் பிரஜாவுரிமையை கொண்டவர் என்ற பிரச்சினை எழுப்பப்பட்டபோது, இரட்டைப் பிரஜைவுரிமையைக் கொண்ட உறுப்பினர்கள் ஒன்பது பேர், இருப்பதாக பல்வேறுபட்ட தகவல்கள் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .