2026 ஜனவரி 07, புதன்கிழமை

‘சகயின்’ கப்பல் மீள எடுக்கப்பட்டது

Editorial   / 2018 ஏப்ரல் 02 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, திருகோணமலை துறைமுகத்தை அண்பித்த கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட ‘சகயின்’ என்ற கப்பல், இலங்கை கடற்படையின் தொழில் நிபுணத்துவத்தின் கீழ், மீளவும் எடுக்கப்பட்டுள்ளது என கடற்படை அறிவித்துள்ளது.  

பிரித்தானியாவுக்குச் சொந்தமான மேற்படி ‘சகயின்’ என்ற கப்பல் 75 வருடங்களுக்குப் பின்னர், மீள எடுப்பதற்கு, இலங்கை கடற்படையின் சுழியோடி பிரிவுக்கு முடிந்துள்ளது என்றும் கடற்படை அறிவித்துள்ளது. 

138 மீற்றர் நீளமான இந்தக் கப்பல், பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றியிறக்குவதற்காக பயன்படுத்தப்பட்டது. அது தனது முதலாவது சேவையை 1924 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 24 ஆம் திகதியன்று ஆரம்பித்தது.  

மேற்படி கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், 1924 ​ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09ஆம் திகதியன்று, ஜப்பான் விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி மூழ்கிவிட்டது.  

அந்தக் கப்பலுக்கு ஏற்பட்டிருந்த பாரிய சேதங்களை கவனத்தில் கொண்டு, அக்கப்பல் கைவிடப்பட்டது. என்றாலும் இறங்கு துறையாக பயன்படுத்துவதற்காக, இந்தக் கப்பலானது 1943 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதியன்று முழுமையாக மூழ்கடிக்கப்பட்டது என்றும் இலங்கை கடற்படை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

திருகோணமலை துறைமுகத்தை இலகுவாக விரிவாக்கம் செய்வதற்கு தேவையை கவனத்தில் கொண்டு, 35 அடி ஆழத்தில் மூழ்கிக்கிடந்த அந்தக் கப்பலை மீள எடுப்பதற்கான நடவடிக்கையை இலங்கை கடற்படை 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாம் 11 ஆம் திகதியன்று ஆரம்பித்திருந்தது.  

கடற்ப​டையினரின் அர்ப்பணிப்பு மற்றும் தைரியம் ஆகியனவற்றினால் 05 மாதங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடைவடிக்கையின் மூலமாக, கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதியன்று அந்தக் கப்பல், கடலுக்கு மேல் தென்பட்டது. இதற்கான நடவடிக்கையில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட 98 பேர் பங்கேற்றிருந்தனர் என்றும் கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .