2026 மார்ச் 05, வியாழக்கிழமை

சட்டமூலத்தில் மாற்றம் கொண்டுவர இணக்கம்

Yuganthini   / 2017 ஜூலை 03 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்
இலங்கை கடற்பகுதியில், இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்தும் சட்டமூலத்தில், சில மாற்றங்களைக் கொண்டுவர இணக்கம் காணப்பட்டுள்ளது.  

இலங்கை கடற்பகுதியில், இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் தொடர்பாக, மக்கள் கருத்தறியும் கலந்துரையாடலில், யாழ். மாவட்ட இழுவைப் படகு தொழிலாளர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதைத் தொடர்ந்தே, மேற்கண்டவாறு இணக்கம் காணப்பட்டுள்ளது.  

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால், இலங்கை கடற்பகுதியில் இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்தும் தனிநபர் சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.  

இந்நிலையில், மேற்படி சட்டமூலம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் கலந்துரையாடல் ஒன்று, யாழ். நகரில் உள்ள விடுதி ஒன்றில், நேற்று (02) மாலை நடைபெற்றது.  

மேற்படி கலந்துரையாடலின் நிறைவில், அனைவரும் செல்ல முற்பட்டபோது, அங்கிருந்த மீனவ சமூகத்தின் குறிப்பிட்ட சிலர், தமது கருத்துகளைக் கேட்காது தமது பிரச்சினை தொடர்பாகப் பேச்சு வார்த்தைகளை நடத்தாது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வதாகக் கூறி அவர்களுடன் முரண்பட்டுக்கொண்டனர்.  இம்முரண்பாடானது, சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்திருந்தது.   

“எதிர்வரும் 6ஆம் திகதி இழுவை மடி மீன்பிடி முறை, சட்டவிரோத மீன்பிடி முறை என்பவற்றுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்படவுள்ள சட்டமூலத்தால், தமக்கும் வாழ்வாதார ரீதியாக பாரிய நெருக்கடிகள் ஏற்படும்” என, அம்மீனவ சமூகத்தினர் தெரிவித்தனர்.  

“கடந்த காலங்களில் எமது பிரச்சினைகள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போது குருநகரில் மீன்பிடித்துறை முகம் ஒன்றை அமைப்பதற்கும் ஆழ்கடலில் மீன் பிடிக்க, அரசாங்கம் மானிய அடிப்படையில் படகுகளை வழங்கவேண்டும்” எனவும் தெரிவித்தனர்.   

இதனைத் தொடர்ந்து, இவர்களது கருத்துக்கு பதிலளித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,  
குருநகரிலும் மயிலிட்டியிலும் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு இணக்கப்பாடு எட்டுப்பட்டு விட்டது எனவும் குருநகரில் அமைக்கப்படுவதாகக் கூறப்பட்ட மீன்பிடித்துறைமுகம் பின்னர் காரை நகருக்கென மாற்றப்பட்டபோதும் அதனைத் தான் மீண்டும் குருநகரிலேயே அமைக்கப்பட வேண்டும் என இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவை நிச்சயமாக மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.   

அத்துடன், உள்ளூர் இழுவை மடி முறை மீன் பிடித்தொழிலை மேற்கொள்ளும் மீனவர்கள் பாதிப்படையா வண்ணம் அடுத்த வாரமே இம்மீன்பிடி முறைகளுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் சட்டமூலத்தில் விதிவிலக்காக சில சில கடற்பரப்புகளில் சிறிய படகுகள் மூலம் இழுவை மடித்தொழிலை மேற்கொள்வதற்கு இடமளிக்கும் வகையிலான சட்டமூலத்தை கொண்டுவருவேன் எனவும் உறுத்தியளித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .