2026 ஜனவரி 05, திங்கட்கிழமை

‘சாப்பிட்டுவிட்டு முடிவெடுத்தால் அடிபணியோம்’

A.Kanagaraj   / 2017 ஜூலை 27 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்...

? நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை விவகாரம் முட்டாள்தனமான முடிவு என்கின்றனரே? 

ராஜித: முட்டாள்தனமான முடிவு குறித்து எனக்குத் தெரியாது. வைத்தியசாலையை அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். தேநீர் கடையைக் கூட நடத்தாதவர்களுக்கு அது பற்றித் தெரியாது. 

? நன்கொடை செய்தது ஏன்?  

ராஜித: அவரிடம் கேளுங்கள். 

? ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது? 

ராஜித: அவை அமைச்சரவைப் பத்திரத்தில் இருக்கின்றன. 

? எரிபொருள் விநியோகம் சீர்குலைந்துவிட்டதே? 

தயாசிறி: இன்று (நேற்று) மாலைக்குள் வழமைக்கு திரும்பிவிடும் என்று பதிலளித்த அமைச்சர் தயாசிறி, அது அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளது என்றார். 

? அவர்களின் கோரிக்கைகள்தான் என்ன? 

ராஜித: தொழிற்சங்க கோரிக்கையாயின் பேசித் தீர்மானிக்கலாம். அது அரசியல் கோரிக்கை, ஆகையால், அவர்களிடமே கேளுங்கள். 

? நிறுத்தமாட்டோம் என்கின்றனர். 

ராஜித: வீட்டுக்குத்தான் போகவேண்டும். அத்தியாவசிய சேவைகள் சட்டம், அவர்களுக்கு தெரியாதுபோலும். பஷில் ராஜபக்ஷவின் வீட்டில் இரவில் சாப்பிட்டுவிட்டு, காலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தால், அடிபணிய மாட்டோம். 

? வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாதவர்களைக் கொண்டு, எரிபொருட்களை விநியோகிக்க முடியுமா? 

ராஜித: பாருங்களேன், செய்து காட்டுகின்றோம். 

? திறைசேரி முறிகள் தொடர்பில், முன்னாள் நிதியமைச்சர் ரவிக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அது அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது அல்லவா? 

ராஜித: ஒரு பக்கம் கேட்டுவிட்டு முடிவெடுக்க முடியாது. 

? டெங்கு நிலைமை, இலங்கையில் மோசமாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதே? 

ராஜித: மரணமடைவோர் மற்றும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. டெங்குக் காய்ச்சல் பரவும் நாடுகளுடன் எமது நாட்டை ஒப்பிட்டுப் பார்த்தால், கூடுதலாகும். ஆனால், ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டால் குறைவு. 

? ஊசியைப் பெற்றுக்கொடுக்கலாமே 

ராஜித: பிரான்ஸ் கண்டுபிடித்த அந்த ஊசிமருந்தை பிலிப்பைன்ஸ் பயன்படுத்துகின்றது. சிங்கப்பூரும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஊசியை பெற்றுக்கொடுக்கலாம். அதனால், டெங்குக் காய்ச்சல் பீடிக்காது என்பதை ஒளடத அதிகார சபைதான் தீர்மானிக்கவேண்டும். 

? வைத்தியர்களும் வேலைநிறுத்தம் செய்கின்றனரே? 

ராஜித: வெற்றியளிக்கவில்லை. வெளிநோயாளர் பிரிவை மட்டுமே பார்க்கக்கூடாது. ஏனைய பிரிவுகளின் சேவைகள் எவ்விதமான பாதிப்புகளுமின்றி முன்னெடுக்கப்பட்டன.  

? ரயனைக் கைதுசெய்ய வெள்ளை வான் போனது ஏன்? (அனைத்துப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர்) 

ராஜித: ரயனுக்கு எதிராக, நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஐந்து பிடியாணைகள் உள்ளன. பொலிஸார் சென்றமுறையை அனுமதிக்க முடியாது. ஏனெனில், ரயன், ரோஹன விஜயவீர அல்லர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சிவிலுடையில் செல்லலாம். இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருடன் பேசியுள்ளோம். இது, அரசாங்கத்தை அசாதாரண நிலைக்குக் கொண்டுச்செல்லும் செயற்பாடாகும். 

? ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சூழ்ச்சியென்று அமைச்சர் மங்கள தெரிவித்துள்ளாரே? 

ராஜித: அரசாங்கமே மாறியுள்ளது. ஆட்சி மாறவில்லைத்தானே 

? ரயனைக் கைதுசெய்யச் சென்றவிதம் சரியா? 

பொலிஸ் பேச்சாளர்: பொலிஸ் அடையாள அட்டை, சீருடையில்தான் செல்லவேண்டும். இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கையிடுமாறு பொலிஸ் மா அதிபர் கோரியுள்ளார். அதிகாரிகளின் செயற்பாடு பிழையென அறிக்கை வந்தால், அவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.  

? யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், குறி வைக்கப்படவில்லையென கூறியிருந்தீர்களே? 

ராஜித: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகரவை இடைமறித்த இணைப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன, இளஞ்செழியன்தான் குறி வைக்கப்பட்டார் என்று கூற முடியாது. யாழ். அரசியல்வாதிகளுடன் அலைபேசியில் உரையாடினேன். துப்பாக்கிதாரி, நீதிபதியையும் பொலிஸாரையும் நன்கு அடையாளம் கண்டுள்ளார். பிறிதொரு கைகலப்பை விலக்குவதற்காக பொலிஸார் சென்றபோதே, இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பொலிஸார் பயன்படுத்தும் கைத்துப்பாக்கியாலேயே சுடப்பட்டுள்ளது. துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாதவர், பயன்படுத்தியிருந்தால், 15 ரவைகளும் ஒரே தடவையில் வெடித்திருக்கும். 

? துப்பாக்கிப் பயிற்சி எடுத்துள்ளீர்களா? 

ராஜித: கொள்கையடிப்படையில், துப்பாக்கியை நான் ஏந்தமாட்டேன். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்கினேன். ஜனநாயகத்தை நான் நம்புகின்றேன்.  

? எரிபொருள் சங்கத்தினரின் வேலைநிறுத்தம், ஜூலை வேலை நிறுத்தமாக மாறிவிடாதா? 

ராஜித: அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது தெரியாதா? 

? எரிபொருள் விநியோகத்தை தனியார் விநியோகஸ்தர்களும் நிறுத்தினால் 

ராஜித: அனுமதிப்பத்திரம் இரத்தாகும் 

? அப்போது, பிரச்சினை கூடாதா? 

? வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்போது, நீங்களும் இவ்வாறான முடிவை எடுக்கலாமே? 

ராஜித: நான், ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை. ஓர் அமைச்சர். அத்துடன், அரசாங்கமும் என்னுடையதல்ல. 

? எந்தவொரு பிரச்சினைக்கும் முடிவெடுக்க ஜனாதிபதியே இறுதியில் தலையிடுகிறார். அமைச்சர்களுக்கு ஏன் முடியாதா? 

ராஜித: பல பிரச்சினைகளுக்கு, அரச தலைவர்களே இறுதியில் தீர்வு கண்டனர். அதற்கான வரலாறுகளும் உள்ளன. தொழிற்சங்கப் பிரதிநிதிகள், ஜனாதிபதியை சந்தித்துப் பேசுவதற்கு விரும்புகின்றனர்.  

? அரசாங்கத்துக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டங்கள் குறித்து 

ராஜித: ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தால், அரசாங்கத்தை பாதுகாக்க நான், நடவடிக்கை எடுப்பேன் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .