2026 ஜனவரி 14, புதன்கிழமை

‘பிரிக்க முடியாத நாடே உருவாகின்றது’

Editorial   / 2017 நவம்பர் 07 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம், ஏ.எம்.ஏ.பரீத், வடமலை ராஜ்குமார், எஸ்.எல்.நௌபர்  

“புதிய அரசமைப்பில், பிரிக்க முடியாத நாடே உருவாகின்றது. அதனடிப்படையில், நாட்டில் உள்ள சகல மக்களும் ஒற்றுமையுடனும் சமத்துவத்துடனும் வாழமுடியும்” என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.  

“உத்தியோகபூர்வ மொழி சிங்களமும் தமிழுமாகும். அதனடிப்படையில், ஏழு மாகாணங்களில் சிங்கள மொழியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியும் உத்தியோகபூர்வ மொழியாகப் பயன்படுத்தப்படும் விதத்தில் அரசியல் யாப்பு உருவாகவுள்ளது” என்றார். 

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், நேற்று (06) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நாம் தற்போது 2017இன் இறுதியிலும் 2018 பிறக்கவும் உள்ள காலப்பகுதியில் உள்ளோம். எதிர்வரும் நாட்களில் பல தேர்தல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒற்றுமையாகவும் நிதானமாகவும் செயற்பட வேண்டும்” என்றார். 

 “பிரதேச சபைகளில், மக்களின் இன விகிதாசாரங்களின் அடிப்படையில் உத்தியோ பூர்வ மொழிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். அரச அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படுகின்ற கடிதங்கள், யாருக்கு அனுப்பப்படுகின்றதோ, அவர்களின் மொழியில் அமைந்திருக்க வேண்டும். அரச உத்தியோகங்களில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இனி இந்த நிலை திருத்தப்பட வேண்டும். இவ்வாறான விடயங்கள் மக்களின் சமத்துவத்தைப் பாதிக்கும். எனவே, அரசாங்க அதிகாரிகளும் இவ்விடயத்தில் சமத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .