Kogilavani / 2017 ஜூன் 06 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புத்தேகம, பாரதிபுரம் பகுதியில் தமிழர்கள் எட்டுப்பேரைச் சுட்டுக்கொன்றார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர், உப-பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட 11 பேர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், நிராயுதபாணிகளாக நின்றிருந்த, அமிர்தலிங்கம் சுரேந்திரன் (வயது-14), அமிர்தலிங்கம் கஜேந்திரன் (வயது-18), முருகேசு ஜனகன் (வயது -17), நாதன் பவளநாதன் (வயது-45), சுப்பிரமணியம் திவாகரன், குணரத்தினம் சிவராஜன், ஆறுமுகம் சேகர் மற்றும் பொன்னம்பலம் கனகசபை ஆகிய எட்டுப் பேரே இவ்வாறு சரமாரியாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் கடந்த 4ஆம் திகதியன்று ஆஜர்படுத்திய போதே, நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
நிராயுதபாணிகளாக நின்றிருந்த சாதாரண குடிமக்கள் எட்டுபேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், நீதிமன்றத்தின் முன்னிலையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அண்மையில் சாட்சியமளித்திருந்தார்.
அவரது சாட்சியத்துக்கும், சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று பொலிஸ் அதிகாரியிடம் அளித்த வாக்குமூலத்துக்கும் இடையில் பரஸ்பர இருந்துள்ளது.
இதேவேளை, பொலிஸ் கான்ஸ்டபிளின் வாக்குமூலத்தில், உண்மைக்கு புறம்பான விடயங்களும் உள்ளமை நீதிபதியால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்தே, தற்போது சேவையில் உள்ள பிரதிவாதிகள், 11 பேரும் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டனர். முறைப்பாட்டாளரின் சாட்சிகளுக்கு அழுத்தங்களை பிரயோகிக்ககூடும் என்பதனால், அந்த 11 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி கட்டளையிட்டார்.
இதில், சாதாரண குடிமக்களான தமிழர்கள் எட்டுப்பேரை சிறைப்பிடித்து, சித்திரவதை செய்து சுட்டுக்கொலை செய்தமை உள்ளிட்ட, 37 அதிக்குற்றச்சாட்டுகளின் கீழ், அன்று கடமையிலிருந்த பொலிஸ் பரிசோதகர், உப-பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் கிராம சேகவர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக, அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
படுகொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வயல்வெளிக்கு, 01-02-1998 அன்று காலை, 5 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், பணிக்கு சென்று கொண்டிருந்தவர்களை, பொலிஸாரும், ஊர்காவல் படையினரும், விசாரணைக்கு எனக்கூட்டி சென்று பொலிஸ் நிலையத்தின் முன்னால் நிற்கவைத்தனர்.
காரணம் ஏதுமின்றி இழுத்துச் செல்லப்பட்ட அப்பாவிகள் நிதானிக்கும் முன்பே, சுற்றி நின்று சுட்டுத் தள்ளினர். அதில், 8 பேர் பலியாகினர். 17 பேர், உயிரிழந்த எட்டுப்பேரில், நான்குபேர் பாடசாலைக் கல்வியை முடிக்காத மாணவர்களாவர். இருவர் பதின்ம வயதை சேர்ந்தவர்களாவர். அவ்விருவரும் சகோதரர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
11 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 Jan 2026