.jpg)
நியூசிலாந்திற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், நியூசிலாந்து அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் நான்காம் நாளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
பொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடி 2 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்றைய நாள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 443 ஓட்டங்களுடன் காணப்படுகிறது.
4 விக்கெட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி சார்பாக 5ஆவது விக்கெட்டுக்காக டெரன் பிராவோ, நர்சிங் டியோநரைன் இருவரும் 122 ஓட்டங்களைப் பகிர்ந்ததோடு, 7ஆவது விக்கெட்டுக்காக டெரன் பிராவோ, டெரன் சமி இருவரும் பிரிக்கப்படாத 80 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக டெரன் பிராவோ ஆட்டமிழக்காமல் 210 ஓட்டங்களையும், கேர்க் எட்வேர்ட்ஸ் 59 ஓட்டங்களையும், நர்சிங் டியோநரைன் 52 ஓட்டங்களையும், டெரன் சமி ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக இஷ் சோதி 2 விக்கெட்டுக்களையும், ரிம் சௌதி, ட்ரென்ட் போல்ட்ற், நீல் வக்னர், கொரே அன்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
டுனேடினிலில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 609 ஓட்டங்களையும், தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 213 ஓட்டங்களையும் பெற்றன.
இதன்படி, 4 விக்கெட்டுக்கள் கைவசமுள்ள நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 47 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கிறது.