.jpg)
பிக் பாஷ் லீக் டுவென்டி டுவென்டி தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணி சார்பாகப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் டிசெம்பர் 20ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணி சார்பாக அனைத்துப் போட்டிகளிலும் பங்குபற்றும் வாய்ப்பு அஜந்த மென்டிஸிற்குக் கிடைத்துள்ளது.
சிட்னி தண்டர்ஸ் அணி சார்பாக விளையாடுவது குறித்து இலங்கையின் முன்னாள் உதவிப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தன்னுடன் கலந்துரையாடிய போது, அந்த வாய்ப்பைத் தவற விட விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட அஜந்த மென்டிஸ், இது மிகச்சிறந்த சந்தர்ப்பமாகும் எனக் குறிப்பிட்டார்.
பிக் பாஷ் லீக் தொடரின் வெற்றியை தான் பார்த்துள்ளதாகவும், உலகிலுள்ள சிறந்த வீரர்களுடன் போட்டியிடுவதற்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்த அவர், மைக்கல் ஹசி போன்ற வீரர்களுடன் விளையாடக் கிடைத்துள்ளமை மிகச்சிறப்பானது எனவும் குறிப்பிட்டார்.
அஜந்த மென்டிஸ் போன்ற சுழற்பந்து வீச்சாளர் தங்களது அணிக்குக் கிடைத்துள்ளமை சிறந்த பலத்தை வழங்குவதாகத் தெரிவித்த சிட்னி தண்டர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, அஜந்த மென்டிஸ் அனைத்து வகையிலான போட்டிகளிலும் சிறப்பாகச் செயற்பட்டுள்ளதோடு, டுவென்டி டுவென்டி போட்டிகளில் மிகச்சிறப்பாகச் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சிட்னி தண்டர்ஸ் அணி சார்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இரண்டாவது இலங்கை வீரர் இவராவார். இதற்கு முன்னர் இலங்கையின் திலகரட்ண டில்ஷான் இவ்வணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.