Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ்)
களுவாஞ்சிகுடி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு, இறுவட்டு வெளியீடு, இணையத்தள அறிமுக விழா என்பன நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடபெற்றது.
இந்நிகழ்வு ஆறுமுகவேல் கோகுலரஞ்சன் தலைமையில் நிறுவனக் கட்டடத்தில் நடைபெற்ற இவ்விழாவில், பிரதம அதிதிகளாக தேசிய மொழிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.பாஸ்கரன், கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.கோணேசபிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இவ்விழாவில் சாதனையாளர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ் வழங்கலும் நடைபெற்றன.
இச் சமூக அபிவிருத்தி நிறுவனம் பிற்பகல் வேளைகளிலும், பாடசாலை விடுமுறை தினங்களிலும் மாணவர்களுக்கு இலவச வகுப்புகளை நடத்தி வருவதுடன் கல்வி ரீதியாக பல சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறது.
இந்நிறுவனத்தால் நீண்ட காலமாக நடத்தி வரப்படும் அல்லிராணி என்ற பெயருடைய இசைக்குழு நேற்று முதல் துளி இசைக்குழு என பெயர் மாற்றப்பட்டது.
இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.கோணேசபிள்ளை, உலகளாவிய ரீதியான போட்டியில் கணிதத்துறையில் சிங்கப்பூர் முதலாமிடத்தை பெற்றுள்ள அதேவேளை அமெரிக்கா 21ஆவது இடத்திலுள்ளது. ஜப்பானையும் இந்தியாவையும் ஒப்பிடும் போது பல்வேறுபட்ட தொழில்நுட்பங்களில் ஜப்பானே முன்னேற்றகரமானதாக இருக்கிறது. இதற்குக் காரணம் இந்தியர்கள் அதிகம் பேசுவார்கள், கேட்கமாட்டார்கள். ஆனால் ஜப்பானியர்கள் அதிகம் பேசமாட்டார்கள், ஆனால் அதிகமாக கேட்பார்கள். குறைந்தளவு பேசி கூடியளவுக்கு வேலைகளைச் செய்பவர்கள் ஜப்பானியர்கள் என்றார்.
அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,
கல்வி ரீதியாக பல்வேறு சாதனைகளை ஏற்படுத்தி வரும் நாங்கள் யாழ்ப்பாணத்திலும் தெல்லிப்பளையிலும் இருந்து பரீட்சை வினாத்தாள்களை பெற்று வருகிறோம். ஆனால் கொழும்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தினுடைய வினாத்தாள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்தளவுக்கு எமது கல்வித்துறை வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் இதற்கு முரணான கருத்தை வெளியிட்டிருந்தமை மன வருத்தத்துக்குரியதாகும் எனவும் குறிப்பிட்டார்.
இங்கு உரையாற்றிய தேசிய மொழிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.பாஸ்கரன், பல தரப்பட்ட மாணவர்களை கல்வி ரீதியில் வளர்த்து விட்டது மாத்திரமல்ல, சுனாமி அனர்த்தத்தின் போதும் பல வேலைகளையும் உதவிகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது.
நான் பிரதேச செயலாளராக களுவாஞ்சிகுடியில் இருந்த போது 40 ஆயிரம் உணவு முத்திரைகளை தந்து உதவியவர்கள் இந்த நிறுவனத்தினரும் மாணவர்களும் தான்.
இக்கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தலைமைத்துவத்தில் உள்ளவர்கள் தான் முக்கியமானவர்கள். இந்நிறுவனம் மேலும் வளர்ச்சி பெற்று இன்னும் பல சேவைகளைச் செய்யவேண்டும் என்றார் அவர்.
கலாசார நிகழ்வுகளும், நடைபெற்ற இவ்விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago