Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
தேசியமொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எதிர்வரும் 25ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேசத்துக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
தேசியமொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டமும் இணைந்து செயற்படுத்தும் நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின் அனுசரணையுடன் நடைபெறும் நடமாடும் சேவையில் பங்குபெறவே அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த நடமாடும் சேவையில் யுத்தம் மற்றும் இடப்பெயர்வுகளால் பாதிக்கப்பட்ட நிலையில் ஆவணங்களை இழந்தவர்களுக்கு சட்ட ஆவணங்கள் வழங்கப்படுமென ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் கருத்திட்ட உத்தியோகத்தர் சட்டத்தரணி ஏ.ஆர்.எல்.சுல்பி தெரிவித்தார்.
பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள், விவாக பிரதிச் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள், முதியோர் அடையாள அட்டைகள் போன்ற சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதன்போது அடையாள அட்டைகளுக்கான புகைப்படங்கள் எடுப்பதற்கும் மற்றும் விண்ணப்பப்படிவங்களும் சட்ட ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படுமெனவும் அவர் கூறினார். எனவே, பொதுமக்கள் தமக்குரிய சட்ட ஆவணங்களை இந்த நடமாடும் சேவையினூடாக பெற்றுக்கொள்ள முடியுமென ஏ.ஆர்.எல்.சுல்பி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்ட உத்தியோகத்தர்கள், தேசியமொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள், கொழும்பு ஆட்பதிவுத் திணைக்கள உத்தியோகத்தர்கள், கொழும்பு பதிவாளர் நாயகம் திணைக்கள உத்தியோகத்தர்கள், சமூகசேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் ஆகியோர் இந்த நடமாடும் சேவையில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கவுள்ளனர்.
6 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Oct 2025