2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

சிறுமியின் மரண விசாரணை அறிக்கை கோரும் ஆளுநர்

Princiya Dixci   / 2021 ஜனவரி 20 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

பெரியகல்லாற்றில் சடலமாக மீட்கப்பட்ட 11 வயதுச் சிறுமியின் மரணத்துக்கான விசாரணையைத் துரிதமாக நடத்தி, தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்,  கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரைக் கேட்டுக்கொண்டார்.

கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரை அழைத்து, பெரியகல்லாற்றில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பான தகவல்களையும் கேட்டறிந்துகொண்ட ஆளுநர், மேற்படி சம்பவம் தொடர்பாக உடனடியாக தனி பொலிஸ் குழுவை அமைத்து விசாரணையை நடத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரிய கல்லாற்றில் மரணித்த சுதாகரன் அஸ்வினி எனும் சிறுமியின் மரணமானது இனம், மதம், மொழி கடந்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

சிறுமியின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தக்கோரியும் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தியும், பெரியகல்லாறு பிரதான வீதியில் கவனயீர்ப்பு போராட்டம், கடந்த புதன்கிழமை (13) முன்னெடுக்கப்பட்டது.

இருந்தபோதிலும், சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வகையிலான செயற்பாடுகள் எதுவும் ஆக்கபூர்வமாக இடம்பெறாத நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் தலைவர் த.ஹரிப் பிரதாப், கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கு, நேற்று முன்தினம் (18)  கொண்டுசென்றார். 

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த சிறுமியின் மரணத்தின் பின்னணியை விரிவாகக் கேட்டறிந்த கிழக்கு மாகாண ஆளுநர், உடனடியாக கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரை நேற்று (19) அழைத்து, சிறுமியின் மரணத்துக்கான விசாரணையை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கு அமைவாக விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டணை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினுடைய எதிர்பார்ப்புமாகுமென, அளுநர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி - சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X