2026 மார்ச் 27, வெள்ளிக்கிழமை

பொலிஸ் நிலையத்தில் மோசடி

Janu   / 2026 மார்ச் 25 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எடேரமுல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பொலிஸ் வெகுமதி நிதியை (Police Reward Fund), அதே பொலிஸ் நிலையத்தை சேர்ந்த மூன்று உத்தியோகத்தர்கள் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பாரிய நிதி மோசடி தொடர்பாக தற்போது கேகாலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் மா அதிபர் (IGP) மற்றும் மேல் மாகாண வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, எடேரமுல்ல பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி உட்பட பல அதிகாரிகளுக்கு பாராட்டு மற்றும் வெகுமதியாக 200 வவுச்சர்களின் கீழ் 8 பணப் பொதிகள் (Bundles) கிடைக்கப்பெற்றுள்ளன. இடமாற்றம் பெற்று சென்ற அதிகாரிகளுக்கு இந்த நிதி போய் சேர வேண்டியிருந்த போதிலும், அவர்கள் கையொப்பமிட்டு பணத்தை  பெற்றுக்கொண்டதாக போலி  பதிவுகளை மேற்கொண்டு இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.

"சாதாரண நடைமுறையின்படி, இடமாற்றம் பெற்று  சென்ற உத்தியோகத்தர்களுக்கு வவுச்சர்களில் கையொப்பமிட வருமாறு அவர்களது தற்போதைய சேவை நிலையங்களுக்கு பொலிஸ் செய்தி (Police Message) அனுப்பப்பட வேண்டும். ஆனால், எமக்கு அவ்வாறான எந்தவொரு அறிவித்தலும் விடுக்கப்படவில்லை," என பாதிக்கப்பட்ட அதிகாரி தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் தனது தனிப்பட்ட தேவை நிமித்தம் களனி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு சென்றிருந்த போதே, தமக்கு இவ்வாறானதொரு வெகுமதி பணம் வழங்கப்பட்டிருந்த விடயத்தை தற்செயலாக அறிந்துள்ளார்.

பணம் ஒதுக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்தும், பாதிக்கப்பட்ட நான்கு அதிகாரிகளுக்கும் சேர வேண்டிய 16,000 ரூபாவுக்கும் அதிகமான தொகை இதுவரை வழங்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் உயர் மட்டம் தற்போது  விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .