2026 மார்ச் 25, புதன்கிழமை

குடும்பத்தை குழப்பிய குறுஞ்செய்தி

Janu   / 2026 மார்ச் 25 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தவறுதலாக ஒருவருக்கு செல்ல வேண்டிய குறுஞ்செய்தி (SMS) மற்றுமொருவருக்கு சென்றதால், இளம் தம்பதியினருக்கு இடையே விவாகரத்து வரை செல்லக்கூடிய அளவிலான பாரிய குடும்பத் தகராறு ஏற்பட்ட சுவாரசியமான சம்பவமொன்று அ​ண்மையில் பதிவாகியுள்ளது.

மஹியங்கனை பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர், கண்டிக்கு சென்றிருந்த வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கண்டிக்கு சென்றிருந்த அந்த நபர், மீண்டும் தனது ஊருக்கு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் தயாரானபோது, கண்டியில் வசிக்கும் தனது உறவினருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், “நான் இப்போது மஹியங்கனை வீட்டிற்கு செல்கிறேன். உங்களுக்கு புத்தரின்  ஆசீர்வாதம் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, அந்த செய்தி அவரது உறவினருக்கு செல்லாமல், கம்பஹா பகுதியில் வசிக்கும் ஒரு இளைஞனின் தொலைபேசிக்கு தவறாக சென்றுள்ளது.

அன்றிரவு சுமார் 7 மணியளவில், கம்பஹாவை சேர்ந்த அந்த இளைஞனின் மனைவி, தனது கணவரின் தொலைபேசியை சோதித்தபோது, இனந்தெரியாத இலக்கத்திலிருந்து வந்த இந்த குறுஞ்செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தனது கணவருக்கு ஏதோ ஒரு பெண் (கள்ளக்காதலி) தான் இச்செய்தியை அனுப்பியுள்ளார் என சந்தேகமடைந்த அவர், தனது கணவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கணவன் எவ்வளவோ விளக்கியும், தனக்கு அத்தகைய தொடர்புகள் ஏதுமில்லை என சத்தியம் செய்தும் மனைவி அதனை ஏற்கவில்லை. சுமார் ஒரு மணிநேரமாக நீடித்த இந்த தகராறின் இறுதியில், அந்த இலக்கத்திற்கு நேரடியாக அழைத்து உண்மையை அறியுமாறு கணவன் கூறியுள்ளார்.

அதன்படி, மனைவி அந்த இலக்கத்திற்கு அழைப்பு எடுத்து வினவியபோது, மறுமுனையில் பேசிய நபர் தான் ஒரு ஆண் என்பதையும், தனது உறவினருக்கு அனுப்ப வேண்டிய செய்தி தவறுதலாக அவர்களுக்கு வந்துவிட்டதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையடுத்து தனது தவறை உணர்ந்த மனைவி, அவசரப்பட்டு சந்தேகமடைந்ததற்காக கணவரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அதற்கு பதிலளித்த கணவன், "அவசர புத்தி ஆபத்தானது என்பதற்கு இதுவே சாட்சி. வீணாக ஒரு மணிநேர நேரத்தை வீணடித்துவிட்டாய்" என கூறி சமாதானமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் தற்போது வேடிக்கையாக பேசப்பட்டு வருகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .