2026 மார்ச் 05, வியாழக்கிழமை

மலையக தமிழ் உறுப்பினர்கள் ஓரணியில் செயற்படத் தீர்மானம்

Kogilavani   / 2017 ஜூலை 05 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஆறு தமிழ் உறுப்பினர்கள், சபையினுள் தனித்து ஓர் அணியாகச் செயற்பட தீர்மானித்துள்ளதாக, அறிவித்துள்ளனர்.

மத்திய மாகாண சபைக் கட்டடத்தில், நேற்று (04) அவர்கள் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.   

மத்திய மாகாண சபையின் அங்கத்தவரான ஆர். ராஜா ராம் இது பற்றித் தெரிவிக்கையில்,  

“ஐக்கிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், எம்.ராம், எஸ்.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, உதயகுமார் மற்றும் திருமதி சரஸ்வதி சிவகுரு ஆகியோரே, தமிழ் முற்போக்கு முன்னணி என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ளோம். இதன் பின்னர், அனைத்து விடயங்களிலும் தாம் ஒரே குரலில் சபை நடவடிக்கைகளில் ஒலிக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.   

தாம், சபையின் ஆட்சி மாற்றத்துக்கு அல்லது வேறு தேவைகளுக்காக இவ்வாறு இணையவில்லை என்றும் இதுகாலவரை சபையில் நாம் பேசும் விடயங்கள் வெறுமனே பேச்சாக மட்டுமே இருந்துள்ளதாகவும் அவை தொடர்பாக தாம் பொதுமக்களுக்கு பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளதால், இதன் பின்னர் கூட்டாக இயங்க முடிவு செய்துள்ளாகவும் கூறினார்.  

இப் புதிய அமைப்பின் தலைவராக எம்.ராமும் செயலாளராக சரஸ்வதி சிவகுருவும், அமைப்பாளராக ராஜாராமும் ஏனையவர்கள் இணை உப தரைவர்களாக செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.  

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 உறுப்பினர்கள் சபையில் இருப்பதாகவும் அதில் ஆறு பேர் இ.தொ.கா.வில் அங்கம் வகிப்பதாகவும் மிகுதி ஆறு பேறும் தமது அமைப்பில் உள்ளதாகவும் தமது அமைப்பே அதிக சேவை செய்துள்ளதாகவும் உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.

ஆனால், இ.தொ.கா. அணிக்கு ஒரு மாகாண அமைச்சும் அவைத் தலைவர் பதவியும் மாகாண சபையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  இந்த நிலையில் பொதுமக்களுக்கு சரியான சேவை புரிவதில் சில பிரச்சினைகள் இருப்பதாகவும் தமது அமைப்பு தமிழ், சிங்கள, முஸ்லிம் பேதமற்ற ஓர் அணியாகத் தொழிற்படுவதாகவும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .