ஈரானின் இரு யுத்தக்கப்பல்கள் சிரியாவை அடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய நாசகாரி கப்பலொன்றும் விநியோகக் கப்பலொன்றும் சிரியாவின் மத்திய தரைக்கடலோரத்திலுள்ள டார்டஸ் துறைமுகத்தில் தரித்து நிற்பதாகவும் இருதரப்பு உடன்படிக்கையின்படி, சிரிய கடற்படையின் பயிற்சிகளில் இக்கப்பல்கள் பங்குபற்றும் எனவும் ஈரானிய தொலைக்காட்சியான பிரஸ் ரீவி தெரிவித்துள்ளது.
ஈரானிய அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக ஈரானுக்கும் இஸ்ரேல் மற்றும் மேற்குலகிற்கும் இடையில் பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில் ஈரானிய கப்பல்கள் சிரியாவை அடைந்துள்ளன. சிரியாவில் தற்போது உள்நாட்டு பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளதுடன் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலுக்கு அருகிலுள்ள நாடு சிரியா என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இரு யுத்தகப்பல்கள் சுயஸ் கால்வாயைக் கடந்து மத்திய தரைக்கடலை அடைந்துள்ளதாக ஈரானிய கடற்படைத்தளபதி கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தார். இக்கப்பல்கள் சிரியாவின் துறைமுகத்தில் தரித்து நிற்பதாக ஈரானிய பாதுகாப்பு அசைமச்ர் அஹ்மட் வஹிதி இன்று தெரிவித்துள்ளார்.
இவ்விரு கப்பல்களும் சுயஸ் கால்வாய்க்கூடாக மத்திய தரைக்கடலை அடைந்திருப்பது நாட்டின் கடற்படை ஆற்றலின் குறியீடாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் சர்வதேச கடற்பகுதியில் ஈரானிய யுத்தக்கப்பல்கள் பிரசன்னமாகியிருப்பது ஈரானுக்குள்ள இயற்கையான உரிமையாகும்எ னவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இக்கப்பல்கள் இஸ்ரேலிய கரையை அண்மிக்காதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அவற்றின் நகர்வுகளை இஸ்ரேல் உன்னிப்பாக அவதானிக்கும் என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


Comments
வாழ்க ஈரான்.
வாழ்த்துக்கள் ஆயிரம் ஈரானுக்கு .
RSS feed for comments to this post