2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரின் இடமாற்றத்துக்கு கண்டனம்

Editorial   / 2019 ஜனவரி 02 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மப்றூக், ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசசபை செயலாளரின் இடமாற்றத்தைக் கண்டித்து, பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இணைந்து, பிரதேசபையின் நுளைவாயிலை அடைத்து நேற்று (01) பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

 அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராகக் கடமையாற்றி வந்த எம்.ஐ.எம். பாயிஸ், நிந்தவூர் பிரதேச சபைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக கையெழுத்திட்டு, மேற்படி இடமாற்றத்துக்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

 ஜனவரி 01ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. நிந்தவூர்பிரதேச சபையின் செயலாளராக பதிற் கடமையாற்றுமாறு, மேற்படி இடமாற்றக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் ஏ.ஏ. சலீம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.

 மேற்படி இடமாற்றம் அரசியல் பழிவாங்கள் என்றும் இதன் பின்னணியில் சில வங்குரோத்து அரசியல்வாதிகள் செயற்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன் தெரிவித்தார்.

எனவே, இவ்விடமாற்றத்தை வன்மையாகக் கண்டிப்துடன், இடமாற்றத்தை உடன் இரத்துச் செய்ய வேண்டுமென, ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்ததுடன், நுளைவாயில் கதவுக்குப் பூட்டு இட்டு, நுளைவாயல் முன்பாக அமர்ந்திருந்தனர்.

இதனால் பிரதேச சபையின் மக்கள் சேவைக்கு நேற்றுத் தடங்கள் ஏற்பட்டதுடன்,  அங்கு கடமை புரிந்து வரும் அரசாங்க சேவையாளர்களும் பெரும் சிரமங்களுக்கு ஆளாகினர்.

இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச சபை பல வளப்பற்றாக்குறையுடன் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் திண்டாடும் இந்நிலையில் ஆளுரின் இவ்விடமாற்ற செயற்பாடு இப்பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தும் என்பதில் ஐயமில்லை என, பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் இதன்போது தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தீகவாபி விகாரை விகாராதிபதியும் கலந்துகொண்டு தமது கண்டனத்தைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .