2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘கரும்புக் காணிகளில் நெல்லுக்கு அனுமதியுங்கள்’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, நுரைச்சோலை கரும்புக் காணிகளில் எதிர்வரும் பெரும்போகத்தில் நெற்செய்கைக்கு அனுமதி வழங்குமாறு, நுரைச்சோலை விவசாயிகள் அமைப்பின் தலைவர் ஏ.எல். மஹ்றூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று (27) அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அம்பாறை மாவட்டத்திலுள்ள 4,400 குடும்பகளுக்கு 5,200 ஹெக்டயர் காணி சீனிக் கூட்டுத் தாபனத்தால் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இக்காணிகளில், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக விவசாயிகள் பிரதி போகமும் நெல் செய்கை பண்ணி, வாழ்வாதாரம் பெற்று வாழ்க்கையை சிறப்பாக முன்னெடுத்து வந்தனர்.

“நாட்டில் சீனி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் எனும் நோக்கில் 2011ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் கரும்புச் செய்கை திணிக்கப்பட்டது. நெல் செய்கை பண்ணப்பட்டு வந்த காணிகளில் பொலிஸாரின் பாதுகாப்போடு பயிர்கள் அழிக்கப்பட்டதுடன், அதிகாரிகள் விவசாயிகளை பய முறுத்தினர்.

“குறித்த காணிகளில் கரும்பு செய்கை பண்ணாது விட்டால், அக்காணிகளை வேறு நபர்களுக்கு உரிமம் மாற்றிக் கொடுப்பதாகவும் அவர்கள் அச்சுறுத்தினர். வேறு வழிகளின்றி நெல் செய்கை பண்ணிய விவசாயிகள் கரும்புச் செய்கையில் ஈடுபட்டனர்.

“2014ஆம் ஆண்டு வரை கரும்புச் செய்கையிலீடுபட்ட விவசாயிகளில் 60 சதவீதமானவர்கள் ஓரளவு இலாபமடைந்தனர். 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் கரும்புச் செய்கையில் ஈடுபட்ட 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள், தொழில் நட்டம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தனர்.

“ஆகையால், கரும்புச் செய்கையில் நட்டம் காரணமாக செய்கையிலீடுபடாது கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படும் சுமார் 3,000 ஏக்கர் காணிகளில் எதிர்வரும் 2017/2018 பெரும் போகத்தில் கரும்புச் செய்கைக்கு அனுமதிக்குமாறும், அதற்கான அறிவுறுத்தலை அம்பாறை அரசாங்க அதிபருக்கு வழங்குமாறும் கோருகின்றோர்” என, அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .