2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கற்கைநெறிகள் புதிதாக ஆரம்பம்

Editorial   / 2018 மே 21 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில், புதிதாக ஏழு கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளனவென, அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் ச. தியாகராசா, இன்று (21) தெரிவித்தார். இதற்கான அனுமதியை, தொழில்நுட்ப பயிற்சித் திணைக்களம் வழங்கியுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

கல்லூரியில் மிகக் குறைவான கற்கைநெறிகளே காணப்பட்டன எனவும், இதை நிவர்த்தி செய்யும் வகையில், தேசிய தொழில் தகைமை கொண்ட புதிய ஏழு கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளனவெனவும் அவர் தெரிவித்தார்.

“தேசிய தொழில் தகைமை மட்டம் மூன்றைக் கொண்ட அலுமினியம் பொருத்துதலில் தேசிய சான்றிதழ், தேசிய தொழில் தகைமை மட்டம் நான்கைக் கொண்ட மோட்டார் சைக்கிள் திருத்துதல், இந்த இரண்டு கற்கைநெறியையும் கற்பதற்கான கல்வித் தகைமை, ஒன்பதாம் வகுப்பாகும்” என்றார்.

“விவசாய கள உதவியாளர், வன் கணினித் தொழில்நுட்பம், மின்னியலாளர் இவை தேசிய தொழில் தகைமை மட்டம் நான்கு என்றடிப்படையில், இவை மூன்றையும் கற்பதற்கு க.பொ.த சாதாரண தரத்தில் இரண்டு அமர்வுகளில் ஆறு பாடங்கள் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

“மேற்கூறிய கற்கைநெறிகள், ஆறுமாத காலத்தைக் கொண்டவையாகும். இவற்றுடன், மூன்று மாதகாலத்தைக் கொண்ட நீர்க்குழாய்ப் பொருத்துநர் கற்கைநெறி தேசிய தொழில் தகைமை மட்டம் மூன்றாகும். இதற்கான கல்வித் தகைமை, ஒன்பதாம் வகுப்பாகும்.

“தொழில் புரிபவர்களின் ஆங்கில மொழியாற்றலை அதிகரிக்கும் வகையில், ஆறு மாத காலத்தைக் கொண்ட உயர் தொழிற்றிறன் ஆங்கிலக் கற்கைநெறி பகுதி நேரமாக ஆரம்பிக்கப்பட உள்ளது. இது, தேசிய தொழில் தகைமை மட்டம் நான்கைக் கொண்டுள்ளது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்கூறிய கற்கைநெறிகள் அனைத்தும் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், இக் கற்கைநெறிகளைப் பயில விரும்பும் மாணவர்கள், அக்கரைப்பற்று தொழில்நுட்பக்கல்லூரியில் உள்ள தொழில் வழிகாட்டல் பிரிவில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பூரணப்படுத்திச் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கற்கைநெறிகளைப் பயிலும் மாணவர்களுக்கு, மாதாந்தம் ஆயிரம் ரூபா உதவிக் கொடுப்பனவு அரசாங்கத்தால் வழங்கப்படுவதுடன், அரை மானியத்துடனான பருவகாலப் பயணச் சீட்டும் ஆறு மாதகால வேலைத்தள பயிற்சியும், உள்நாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும், கல்லூரியின் அதிபர் ச.தியாகராசா மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .