2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கல்முனையில் சந்தைகளை 03 நாள்களுக்கு மூடத் தீர்மானம்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2020 மார்ச் 18 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கும் அனைத்து பொதுச் சந்தைகளையும் நாளை (19) தொடக்கம் 03 நாள்களுக்கு தாற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இக்காலப்பகுதியில் சன நெரிசல் ஏற்படாதவாறு விசாலமான பொது வெளிகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வர்த்தகர்களும் பொதுமக்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று (18) கல்முனை மாநகர மேயர், ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொலிஸ் பொறுப்பதிகாரி, முப்படைகளின் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பல தரப்பினரதும் பங்கேற்புடன் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இது குறித்து கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவிக்கையில்;

"உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிற நிலையில் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பையும் பொதுமக்களின் நலனையும் கவனத்தில்கொண்டு, பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்துக்கமைவாக கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு, சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

“இதன்பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இயங்கி வருகின்ற அனைத்து பொதுச் சந்தைகளையும் வியாழன் (19) தொடக்கம் 03 நாட்களுக்கு தாற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதுடன் இக்காலப்பகுதியில் சந்தைகளுக்குப் பதிலாக சன நெரிசல் ஏற்படாதவாறு விசாலமான பொது ளிகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வர்த்தகர்களையும் பொது மக்களையும் அறிவுறுத்துகின்றோம்.

“குறிப்பாக, கல்முனை மாநகர பொதுச் சந்தைக்குப் பதிலாக சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் அங்கும் இங்குமாக வியாபாரங்களை மேற்கொள்ள முடியும். அவ்வாறே மாநகர சபைக்குட்பட்ட ஏனைய பிரதேசங்களிலும் பொதுவெளிகளில் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

“அத்துடன், மறு அறிவித்தல் வரை சிறுவர் பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஒரு இடத்தில் ஆகக்கூடியது ஐந்து நபர்கள் கூடுவதைத் தடை செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. 

“திருமண நிகழ்வுகள், பொது வைபவங்கள் அனைத்தையும் மண்டபங்களில் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதுடன் அவசியமான திருமணம் உள்ளிட்ட  நிகழ்வுகளை முடியுமானவரை ஒரு சிலரின் பங்கேற்புடன் தமது வீடுகளில் நடத்துமாறும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

“அண்மித்த காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்திருப்போர் தம்மை பொலிஸ் நிலையங்களில் அல்லது கிராம சேவகரிடம் தம்மை பதிவு செய்து கொள்வதுடன் அவசியமானோர் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.

“வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எவராயினும் ஹோட்டல்கள், விடுதிகள், வீடுகளில் தங்கியிருந்தால் அவர்களை உடனடியாக பொலிசாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

“மறு அறிவித்தல் வரை வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் வெளியூர்களை சேர்ந்த நபர்களை ஹோட்டல்கள், விடுதிகள், வீடுகளில் தங்க வைப்பதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

“மேற்படி அறிவுறுத்தல்களை பின்பற்றத்தவறுகின்ற எவராக இருந்தாலும் அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறி, கொரோனா வைரஸ் பரவலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் தகுதி, தராதரம் பாராமல் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .