2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆசிரியர் நியமனத்துக்கும் இடமாற்றத்துக்கும் புதிய கொள்கை

Editorial   / 2017 ஜூன் 22 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான புதிய கொள்கையை இவ்வாண்டில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

புதிய கொள்கைக்கமைய எந்தவொரு பாடசாலையிலும் ஆசிரியர்கள் மேலதிகமாக இருக்க முடியாதென்பதுடன், மேலதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற வேண்டுமென சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவை, சுங்காவில முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிய கட்டடத்தை மாணவர்களுக்கு உரித்தளிக்கும் நிகழ்வு, இன்று வியாழக்கிழமை (22) முற்பகல் நடைபெற்றபோதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டிலுள்ள பிள்ளைகளின் கல்வி சீராக வேண்டும் என்பதற்காக  தீர்மானத்துக்கு வந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டிலுள்ள எந்தவொரு பிள்ளைக்கும் கல்விக்கான சலுகைகள் கிடைக்காமல் இருக்கக் கூடாதென்று தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து இனத்தவர்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்தல், வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் ஒரே வகையில் சேவையாற்றுதல் ஆகியவை ஜனாதிபதி என்ற வகையில் தனது பொறுப்பாகுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சுங்காவில் முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு இன்று முற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, மாணவர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டார்.  

நினைவுப் படிகத்தை திறந்து வைத்து, ஐந்து வகுப்பறைகளுடனான புதிய கட்டடத்தை, மாணவர்களுக்கு உரித்தாக்கிய ஜனாதிபதி, கண்காணிப்பு விஜயத்திலும் ஈடுபட்டார்.
”புத்தெழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட  அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், இந்த பாடசாலை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான நிர்மாணப் பணிகளுக்கு, இலங்கை இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

வட மத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, மாகாண அமைச்சர் சம்பத் ஸ்ரீ நிலந்த, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .