2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

செல்சி, டொட்டன்ஹாம் வென்றன

Editorial   / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான 2018/19 பருவகாலத்துக்கான பிறீமியர் லீக் தொடர் நேற்று ஆரம்பித்த நிலையில், அன்றிரவு இடம்பெற்ற போட்டிகளில் செல்சி, டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் உள்ளிட்ட அணிகள் வென்றன.

ஹட்டர்ஸ்பீல்ட் டெளண் அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றிருந்தது.

இப்போட்டியின் 34ஆவது நிமிடத்தில், வில்லியன் கொடுத்த பந்தை என்கலோ கன்டே கோலாக்க செல்சி முன்னிலை பெற்றது. பின்னர், போட்டியின் முதற்பாதி முடிவில் மார்கோஸ் அலோன்ஸோ வீழ்த்தப்பட வழங்கப்பட்ட பெனால்டியை ஜோர்ஜினியோ கோலாக்க 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற செல்சி, மாற்று வீரராகக் களமிறக்கப்பட்ட ஈடின் ஹஸார்ட் வழங்கிய பந்தை போட்டியின் 80ஆவது நிமிடத்தில் பெட்ரோ கோலாக்க இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இதேவேளை, நியூகாசில் யுனைட்டட் அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றிருந்தது.

இப்போட்டியின் எட்டாவது நிமிடத்தில் ஜான் வெர்டொங்கன் தலையால் முட்டிப் பெற்ற கோல் மூலம் ஆரம்பத்திலேயே டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றிருந்தது. எனினும் அடுத்த மூன்றாவது நிமிடத்தில் ஜொசெலு பெற்ற கோலின் மூலம் கோல் எண்ணிக்கையை நியூகாசில் யுனைட்டட் சமப்படுத்தியது. எவ்வாறெனினும் அடுத்த ஏழாவது நிமிடத்தில், சேர்ஜி ஒரியரிடமிருந்து வந்த பந்தை டெலே அல்லி தலையால் முட்டிப் பெற்றக் கோலோடு இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றது.

இந்நிலையில், இலங்கை நேரப்படி நேற்று  அதிகாலையில் இடம்பெற்ற ஆரம்ப நடப்புப் பிறீமியர் லீக் போட்டியில், லெய்செஸ்டர் சிற்றியை மன்செஸ்டர் யுனைட்டட் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .