2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘வட, கிழக்கு இணைந்தாலே கல்வியில் முன்னேற்றம்’

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 ஒக்டோபர் 18 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணம் கல்வியில் இறுதி நிலையில் உள்ளதாகவும் வடக்கையும் கிழக்கையும் இணைத்தால்தான் கல்வியில் நாம் முன்னேற முடியுமெனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கை சைவப்புலவர் கே.வி.மகாலிங்கம் சமூக அறக்கட்டளை அமைப்பின் நிதியுதவி மூலம், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் கல்குடா கல்வி வலயத்தில் 2016ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான வறிய மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு, கல்குடா வலயக் கல்வி அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் கல்வியுடன் அனைத்து விடயங்களிலும் உயர்ந்து செல்வோம். சில இடங்களில் முன்னேற்றம் காணப்படுவதால் தான் நாங்கள் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். கல்வியை நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

“பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாவதற்கு ஒரு சில வெட்டுப் புள்ளிகளால் தட்டுப்படுபவர்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள். அதுபோன்று வறிய மாணவர்களுக்கு 20 சதவீதமான நிதியைச் செலுத்த அனுமதிப்பதற்கான முன் மொழிவுகளையும் வழங்கியிருக்கின்றோம்.

“தமிழ் மக்கள் மத்தியில் தற்போது சட்டத்தரணிகள், பொறியிலாளர்கள், வைத்தியர்கள் தட்டுப்பாடு காணப்படுகின்றது. எனவே, அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய கடமை மாணவர்களிடம் தங்கியுள்ளது.

“எமது மாணவர்கள், பல்கலைக் கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது, கிழக்குப் பல்கலைக்கழகத்தை முன்னுரிமைப்படுத்தி அனுப்புவதில்லை. ஆனால், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சகோதரர்கள், கிழக்குப் பல்கலைக்கழகத்தை முன்னுரிமைப்படுத்தி விண்ணப்பிப்பதால் இங்கு அனுமதி கிடைக்கின்றது.

“கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கலைப்பிரிவு உள்ளபடியால் தமிழர்கள் 100 சதவீதமாக உள்ளனர். அதுவும் ஆங்கில மொழிக்கு மாற்றப்படுமாக இருந்தால், அந்த வீதமும் குறைந்து விடும். கிழக்கு பல்கலைக் கழகம், கிழக்கு வாழ் மக்களுக்கு உதவ முடியாத பல்கலைக் கழகமாக மாறும். எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் தமிழ் மாணவர்கள், கிழக்கு பல்கலைக் கழகத்தை முன்னுரிமைப்படுத்தி விண்ணப்பியுங்கள்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .