2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாள் சம்பளமாக ’ஒப்பந்தத்தில் ரூ.1,000 உள்ளடக்கப்பட வேண்டும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவரது நாள் சம்பளம், 1,000 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கை தொழிலாளர் செங்கொடிச் சங்கம், இவ்விடயம், கூட்டொப்பந்தத்தில் எவ்வித நிபந்தனைகளுமின்றி உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இம்முறை செய்துகொள்ளப்படவுள்ள கூட்டொப்பந்தத்தில், ஊதிய உயர்வு உள்ளடங்கலாக, தொழிலாளர் நலன்சார்ந்த அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று, அச்சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர் மேனகா கந்தசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேற்படி சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு, கண்டி பேராதனையில் அமைந்துள்ள சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்விடயத்தை வலியுறுத்தினார்.

இதன்போது மேலும் கூறிய அவர், 2003ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில், தொழிலாளர்களது ஊதிய உயர்வு உள்ளடங்கலாக, தொழிலாளர் நலன்சார்ந்த முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டனவெனச் சுட்டிக்காட்டியதுடன், ஆனால், அதன் பின்னர் செய்துகொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களிலும், சம்பள அதிகரிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்பட்டதெனத் தெரிவித்தார்.

பெருந்தோட்டங்களில் அதிகமாகப் பெண்களே பணியாற்றி வருவதாகத் தெரிவித்த அவர், எனினும், பெண் தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து, எவரும் சிந்திப்பதில்லை என்றும் சாடினார்.

எனவே, இம்முறை செய்துகொள்ளப்படவுள்ள கூட்டொப்பந்தத்தில், பெண் தொழிலாளர்களின் நலன் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதுடன், தோட்டங்களில் மலசலகூடங்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் உள்ளடக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்தச் சந்திப்பில், சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.ஸ்டீவன், பொருளாளர் ஆனந்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .