2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விஷமிகளிடமிருந்து “வனவிலங்குகளை பாதுக்காக்க வேண்டும்”

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சனகுமார ஆரியதாச

“நாட்டின் சில பாகங்களில், தற்போது நிலவிவரும் வரட்சியான வானிலை காரணமாக, வனவிலங்குகள் நீர்த்தேடி குடியிருப்புகளை நோக்கி வருகின்றன. இவ்வாறு வரும் வனவிலங்குகளை, விஷமிகள் வேடையாடும் செயற்பாட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தகையச் செயற்பாடுகள் வனவிலங்குகளின் அழிவுக்கு வழிவகுக்கின்றன” என்று, கல்கிரியாகம வனவிலங்குத் திணைக்கள பிரதானி டீ.ராமசிங்க, தெரிவித்தார்.

எனவே, “விஷமிகளிடமிருந்து வனவிலங்குகளை பாதுகாப்பதற்கு, ஆரோக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

கல்கிரயாகம வனவிலங்குத் திணைக்கள பிரிவுக்கு உட்பட்ட, கஹல்ல, பல்லேகல காட்டுப் பகுதியில், வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள், நேற்று, நேற்று முன்தினம் இரவு மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த ஏழுபேரை கைதுசெய்துள்ளடன், பல பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றை இறைச்சியாக்கி விற்பனை செய்து வந்தவர்கள், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மற்றும் கால்நடைகளை திருடுவதற்காகச் சென்றோரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களிடமிருந்து, வெடிவைத்துக் கொல்லப்பட்ட இரு மான்களின் இறைச்சி மற்றும் உடல்கள், தீப்பந்தம், மணல் ஏற்றப்பட்ட நிலையில் இருந்த இரு டிரக்டர் வண்டிகள் மற்றும் எருமை மாடுகளைக் கொண்டுச் செல்வதற்கு தயார் நிலையிலருந்த சிறியரக லொறி என்பவற்றையும், அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி எழுவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் மேலும் கூறினார். இதன்போது, கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறிய அவர்,

“இலங்கையிலுள்ள பல வனங்களில், மிருகங்களை வேட்டையாடும் செயற்பாடு தற்போது பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நீர்தேடி குடியிருப்புகளை நோக்கி வரும் விலங்குகளை சிலர், தமது குடியிருப்புகளுக்கு அருகில் வைத்தே வேட்டையாடுகின்றனர்.

ஒருசிலர், வனப்பகுதிகளுக்குச் சென்று, வெடிவைத்து விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். எனவே, இவ்வாறானவர்களிடமிருந்து, வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இது தொடர்பில், மக்கள் மத்திய பாரிய விழிப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இதேவேளை, வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வரும் விஷமிகள், பாரிய சுற்றுச்சூழல் அழிவுக்கு வழிவகுக்கின்றனர். கஹல்ல, பல்லேகெல காட்டுப்பகுதியில், சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மணல் அகழ்வை தடுத்து நிறுத்துவதற்காக, வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் 24 மணித்தியாலங்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .