2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’அதிகாலையிலேயே வாக்களிப்பை மேற்கொள்ளுங்கள்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வாக்காளர்கள் அதிகாலையிலேயே சென்று  வாக்களிப்பை மேற்கொள்ளுமாறு, யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

நாளை நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கான சகல பூர்வாங்க ஏற்பாடுகளும்  மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளனவென்றார்.

இன்று காலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளும் சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களும் தேர்தல் மத்திய நிலையத்திலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரெனவும், அவர் கூறினார்.

“இந்தத் தேர்தலில் யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்தில் 4 இலட்சத்து 79 ஆயிரத்து 584 வாக்காளர்களும் கிளிநொச்சி நிர்வாக மட்டத்தில் 92 ஆயிரத்து 264 வாக்காளர்களும் மொத்தமாக யாழ். தேர்தல் மாவட்டத்தில் 5 இலட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். 

“அதேபோன்று யாழ். நிர்வாக மாவட்டத்தில் 508 வாக்களிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 107 வாக்களிப்புநிலையமுமாக மொத்தமாக 615 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

“அதேபோன்று வாக்கெண்ணும் நிலையங்களை பொறுத்தவரையிலே சாதாரண வாக்கெண்ணும் நிலையங்களாக யாழில் 73 நிலையங்களும் கிளிநொச்சியில் 14 மொத்தமாக 103 வாக்கெண்ணும் சாதாரண நிலையங்களும் அதேபோல் 16 தபால் மூல வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

“ யாழ். தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக7 பேர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவுள்ளார்கள். அதற்காக 330 பேர் போட்டியிடுகிறார்கள். 19 அரசியல் கட்சிகளும் 14 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 33 கட்சிகள்  போட்டியிடுகின்றன. இந்தத் தேர்தலில் தேர்தல் கடமைகளுக்கென 8,235  உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த தடவை விசேடமாக சுமார் 450 உத்தியோகத்தர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கான பணியில் அமர்த்தியுள்ளோம்” எனவும், அவர் கூறினார்.

“இந்தத் தேர்தலில், சுகாதார நடைமுறைகளையும் அதனுடைய வழிகாட்டல்களையும் பின்பற்றி மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு காணப்படுவதன் காரணமாக, அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் அதற்குரிய ஏற்பாடுகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

“அதேபோல் மாற்றுத்திறனாளிகள் அந்த இடத்துக்குச் செல்வதற்குரிய ஏற்பாடுகளும் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை நேரகாலத்துடன் சென்று வாக்களிப்பை மேற்கொள்ள வேண்டும்.  சுகாதார நடைமுறை மற்றும் சமூக இடைவெளியை பேணி முக கவசம் அணிந்து வாக்களிக்க முடியும் 

“யாழில், 30 பேர்  தனிமைப்படுத்தலில் உள்ளார்கள். அவர்களுக்குரிய வாக்களிக்கின்ற சந்தர்ப்பமும் இம்முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 26 வாக்களிப்பு நிலையங்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனவும், அவர் தெரிவித்தார்.

“சுகாதார நடைமுறையை பின்பற்றுவதற்காக மேலதிகமாக சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களும் சுகாதார உத்தியோகத்தர்களும் அங்கே நியமிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள் அல்லது பொதுச் சுகாதார பரிசோதகர் இந்த நடைமுறையைச் செயல்படுத்தவுள்ளார்.

“வாக்காளர்கள் எந்தப் பயமுமின்றி தங்களுடைய வாக்குரிமையை செயல்படுத்த முடியும். அதற்குரிய சுகாதார நடைமுறைகள் சம்பந்தமான விடயங்கள்  ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளன.

“5ஆம் திகதி வாக்களிமுடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் தேர்தல் மத்திய நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டு 6ஆம் திகதி காலை 7 மணி அளவில் வாக்கெண்ணும் பணி  ஆரம்பிக்கப்படவுள்ளது.

“நெடுந்தீவு பகுதியில், வாக்குப்பெட்டி வழமைபோன்று வான் மார்க்கமாக கொண்டுவருவதற்குரிய நடவடிக்கையை தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. அதே போல ஏனைய தீவு பகுதிகளுக்கான வாக்குப் பெட்டிகளும் கடற்படையின் உதவியுடன் எடுத்து வருவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்.  

“இந்தமுறை தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே, அனைத்து மக்களும் அதிகாலையிலேயே சென்று  வாக்களிக்களியுங்கள்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .